முதல் நாளே இப்படியா! சென்னை வொண்டர்லாவில் ஏகப்பட்ட சிக்கல்! மன்னிப்பு கேட்ட நிர்வாக இயக்குநர்

முதல் நாளே இப்படியா! சென்னை வொண்டர்லாவில் ஏகப்பட்ட சிக்கல்! மன்னிப்பு கேட்ட நிர்வாக இயக்குநர்



சென்னை: வொண்டர்லா தீம் பார்க் நேற்றைய தினம் சென்னையில் திறக்கப்பட்டது. இருப்பினும், முதல் நாளே பல ரைட்கள் பாதியில் நின்றதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில், இது குறித்து வொண்டர்லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் விளக்கமளித்துள்ளார்.


நாட்டின் பிரபலப் பொழுதுபோக்குப் பூங்காவான "வொண்டர்லா" தனது 5ஆவது கிளையை சென்னையில் தொடங்கியது. இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட தீம் பார்க் சென்னையில் இல்லை என்று நீண்ட காலமாகவே குறை இருந்த நிலையில், அந்தக் குறை தீர்ந்தது. திருப்போரூர் அருகே 65 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ 611 கோடி செலவில் வொண்டர்லா கட்டப்பட்டது.


இந்த தீம் பார்க்கை கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நேற்று டிசம்பர் 2ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக இந்த தீம் பார்க் திறக்கப்பட்டது. முதல் நாள் சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. முதல் நாள் என்பதால் நேற்றைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும், சில ரைட்கள் பாதியில் நிறுத்தப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது.


சிக்கல்கள்

மக்கள் ரைட்களில் இருக்கும்போதே நின்றதாகவும் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாகவும் சிலர் இணையத்தில் பதிவிட்டனர். அப்படி தான் ஒரு வீடியோவில் மக்கள் இருக்கும்போதே ரைட்களில் போல்ட் வைத்து ரிப்பேர் செய்த வீடியோவும் இணையத்தில் பரவியது. இதுபோன்ற வீடியோக்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே வொண்டர்லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் இது குறித்து விளக்கமளித்துள்ளார். வொண்டர்லாவில் 100% பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


விளக்கம்

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், "நேற்று எங்கள் சென்னை வொண்டர்லாவின் முதல் நாள்.. புயல் இருந்த போதிலும் சுமார் 2,000 பார்வையாளர்கள் எங்கள் பார்க்கிற்கு வந்தனர். இது ஒரு மிக பெரிய வரவேற்பாக இருந்தது. இவ்வளவு அன்பைக் காட்டிய சென்னை மக்களுக்கு நன்றி. ஆனால் முதல் நாள் என்பதாலும் மோசமான வானிலை காரணமாகவும், பல முறை மின்தடைகள் ஏற்பட்டன. இதன் காரணமாகச் சில ரைட்கள் பாதியிலேயே நின்றன. எங்கள் குழு ரைட்களை விரைவாகச் சரி செய்ய முயன்றது.


ஆனாலும், சில தாமதங்கள் ஏற்பட்டன. ஒரு சிலர் சிரமத்தை எதிர்கொண்டனர். எனவே, வொண்டர்லா சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் தவறுகளைச் சரிசெய்ய விரும்புகிறோம். நேற்று உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டிருந்தால், தயவுசெய்து எங்கள் பக்கத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்போம்.


பாதுகாப்பானது

ஆனால் ஒரு விஷயத்தை இங்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் ரைட்கள் 100% பாதுகாப்பானவை. ரைட்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதுபோன்ற பிரச்சனைகள் (மின்தடையால் பாதியில் நிற்பது) மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கை எடுப்போம். இவை வெறும், முதல் நாள் பிரச்சனைகள் தான். எனது விளக்கம் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்.


தீம் பார்க் குறித்து வெளியான வீடியோக்கள் சில மிகைப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் தீம் பார்க் பாதுகாப்பானவை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறோம்.. 5 கோடிக்கும் அதிகமான மக்கள் எங்கள் தீம் பார்க்கிற்கு வந்து சென்றுள்ளனர்" என்று கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%