ஆனந்த பாஸ்கரில்.....
தினமும் வருகின்ற ஆனந்தி யின் நாலைந்து வரி நற்போதனை உயர்வான உற்சாக டானிக். சுயஒழுக்கம், தன்னம்பிக்கை, நேர்மறைச் சிந்தனைகளின் கூட்டுக் கலவையான குறுந்தொகை. நான் வாசித்து அனுபவிக்கத் தவறுவதில்லை.
கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் அரசியலில் நிகழ்ந்த திருப்பங்கள் குறித்த ரிப்போர்டிங் பயனுள்ள தகவல் தொகுப்பு. அரசியல் குறித்த அலை வீச்சு அழகுதான்.
அனுமனின் புனித வரலாறு "வாயு புத்ரா" என்ற 3 டி. திரைப்படம் தயாராவது மெத்த மகிழ்ச்சியான செய்தி. இதற்கு முன்பு "மகாவதார் நரசிம்மா" வெளிவந்து வசூலில் சாதனை படைத்துள்ளது. ஆன்மீகம் நலிந்து, அராஜகம் பொலிந்து வரும் இக்கால சமூகத்துக்குத் தேவையான அருமருந்து இத்தகைய படங்கள். அப்படியாவது பக்தி துளிர்க்கட்டுமே. இதன் தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குனர் சந்து மெண்டேட்டி பாராட்டுக்
குரியவர்கள். மேலும் பக்கம் 8 ல் வந்துள்ள எல்லா சினி செய்திகளும் ஹாட் அண்ட் சுவீட் தான்.
தமிழ்நாடு இ இதழில்......
நலம் தரும் மருத்துவம் பகுதி வழக்கம்போல் பயனுள்ள தகவல் திரட்டு. தாமரையின் மருத்துவ, ஆன்மீக, அடிப்படையிலான ஒப்பற்ற பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவியது.
பக்கம் 15 ல் உள்ள ஆன்மீக படைப்புகள் அருமை. மகாளய அமாவாசையின் சிறப்பியல்புகளும், தர்ப்பணம் குறித்த அறிவூட்டல்களும் அவசியம் அனைவருக்குமானவை. முன்னோர்க்கு தர்ப்பணமே செய்யாத பலர் இருப்பதும் சோகமான உண்மைதான்.
கர்நாடகாவில் வனத்துறையினர் ஏழு பேர் கூண்டில் அடைக்கப்பட்டது கவனம் பெறுகிறது. வனத்துறையினரின் பக்கத்து விளக்கத்தையும் கேட்க வேண்டியது அவசியம்.
பூமியின் மீது மோதும் விண் கல் பற்றிய உண்மைகள் அழகாக விளக்கப்பப்பட்டுள்ளன. அதோடு கூட " எந்த ஒரு கூற்றையும் ஆதாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்வது ஒரு சமூகத்தின் பகுத்தறி வைப் பலவீனப் படுத்தும்" என்று சுட்டிக்காட்டி உள்ளதும் சிறப்பு.
அமெரிக்காவில் அறிமுகமாகும் டிக் டாக் கல்விப் புலம்,
பணக்காரர் வரிசையில் எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்,
பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தால் பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்பித் தரப்படும் என்ற அமெரிக்க நிதி அமைச்சரின் அறிவிப்பு,
இஸ்ரேல் ஒரு கோழை என்ற கத்தாரின் சுவையான கண்டுபிடிப்பு,
இந்திய வீரர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்க்க வேண்டாம் என்ற இந்தியாவின் வேண்டுகோள்,
பருத்தித்துறையில் இந்தியப் பங்களிப்பில் துறைமுகம் போன்றவை நமது கவனம் ஈர்க்கும் அயல் செய்திகளாக விளங்குகின்றன.
படைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். தெய்வம் இதழுக்கு சந்தாதாரர்களை சேர்க்கும் வேள்வியில் தங்களின் முயற்சி எனும் ஆகுதி அவசியம் தேவை. அது தமிழ்நாடு இ இதழ் குழுமத்தாற்கு நாம் ஆற்றும் நன்றிக் கடனல்லவா?ஆன்மீக ஜ்வாலை சுடர்விட்டுப் பிரகாசிக்க, தெய்வம் இதழின் தேஜஸ் மிளிர, அனைவரும் இணைந்து ஒரு டீம் ஒர்க்காக முயல வேண்டும் என்பதை வலியுறுத்தி நிறைவு செய்கிறேன்.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றிகள்.
P. கணபதி
பாளையங்கோட்டை.