வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு ஏன்? - ட்ரம்ப்பின் ஆசையும் பின்னணியும்

வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு ஏன்? - ட்ரம்ப்பின் ஆசையும் பின்னணியும்



வாஷிங்கடன்: அமெரிக்க அதிபரி அதிகாரபூர்வ வசிப்பிடம்தான் வெள்ளை மாளிகை. இது வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல. அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது உலகையே ஆட்டிப்படைக்கும் பல்வேறு அரசியல், பொருளாதார முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட / எடுக்கப்படும் ஓவல் அலுவலகத்தையும் உள்ளடக்கியது இந்த மாளிகை.


இந்த வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, அதில் ஒரு பால் ரூம் (ballroom - விருந்தரங்கம்) கட்ட வேண்டும் என்பது அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆசை. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் கூட அதைக் கட்டி முடித்தே தீருவேன் என்று பணிகளை ஆரம்பித்துவிட்டார் ட்ரம்ப். இதற்கான செலவு 300 மில்லியன் யுஎஸ் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2600 கோடிக்கு மேல்). ட்ரம்ப்புக்கு ஏன் இப்படியொரு ஆசை, எதற்காக இத்தனை பெரிய செலவு, இந்த பால் ரூமின் பயன்தான் என்னவென்று சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.


காரணம் என்ன? - அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மிகச் சிறந்த கட்டிடக் கலை கொண்ட மாளிகைகளில் ஒன்று. வெளியில் இருந்து பார்க்கவே பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட இந்த மாளிகை உயர் பாதுகாப்பு கொண்டது. இந்த மாளிகைக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையில் அவர்களை வரவேற்று உபசரிக்க ஒரு நல்ல விருந்தரங்கம் இல்லை என்பது ட்ரம்ப்பின் ஆதங்கம். அதனாலேயே ட்ரம்ப் அதிபர் தேர்தல் போட்டியின்போதிருந்தே, “நான் அதிபரானால், வெள்ளை மாளிகையில் பிரம்மாண்ட பால் ரூம் கட்டப்படும்” என்று கூறிவந்தார். அதன்படி தற்போது பால் ரூம் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டன. 2029 ஜனவரி இறுதிக்குள் இந்த கட்டுமானப் பணி முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது 90 ஆயிரம் சதுர அடியில், ஒரே நேரத்தில் 650 பேரில் இருந்து 1000 பேர் வரை அமரக் கூடிய அளவில் இந்த பால் ரூம் கட்டப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் ஈஸ்ட் விங் எனப்படும் கிழக்குப் பகுதியில் தான் இந்த பால் ரூம் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தான் அமெரிக்க அதிபரின் மனைவியின் அலுவலகம் உள்ளது. 1948-ம் ஆண்டுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய கட்டுமானப் பணி இதுதான்.


திட்டத்துக்கு எங்கிருந்து வருகிறது பணம்? - வெள்ளை மாளிகை அமெரிக்க வரலாற்றின் ஒரு சின்னம் என்பதால், அதனை இடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதேபோல் இந்த கட்டுமானப் பணியானது யுஎஸ் ஷட்டவுனுக்கு மத்தியில் நடக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளைக்கு அனுமதி தர வேண்டிய தேசிய முதன்மை திட்ட ஆணையம் அமெரிக்க அரசு முடக்க காலத்தில் செயல்படாது. இத்தகைய நிலையில் கட்டுமானப் பணி நடப்பதும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதற்கான 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி எங்கிருந்து வருகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது இன்னொரு சர்ச்சையாக உருவாகியுள்ளது.




திங்கள்கிழமை பால் ரூம் கட்டுமானப் பணி தொடங்கியபோது ட்ரம்ப், அது பற்றி தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியிருந்தார். அதில் அவர், “150 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அதிபர்கள் இங்கொரு பால் ரூம் கட்டப்பட வேண்டும் என்று விரும்பினர். ஆனால், அதைச் செய்த முதல் அதிபர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். அதுவும் வரி செலுத்துவோருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இந்தக் கட்டுமானப் பணி நடக்கப்போகிறது. ஆம், இந்த பால்ரூமுக்கு நிறைய பேர் நிதியளிக்கின்றனர். அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், தாராள மனம் கொண்ட தேசியவாதிகள் தரவிருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.


ஆனால், இதற்கான பணத்தை அதிபர் ட்ரம்ப் சும்மா பெறவில்லை. பல பெரிய நிறுவனங்களுக்கு பல சகாயங்களை செய்து கொடுத்து இதை அவர் சாத்தியமாக்கியுள்ளார் என்று அமெரிக்க ஊடகங்கள் பல செய்திகள் வெளியிட்டுள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%