tamilnadu epaper

எங்கள் ஊர் அதியமான் கோட்டை சிறப்புகள்

எங்கள் ஊர் அதியமான் கோட்டை சிறப்புகள்

எங்கள் ஊர் அதியமான் கோட்டையானது தர்மபுரி மாவட்டத்தின் தலைநகரும் சங்ககாலத்தில் தகடூர் என அழைக்கப்பட்ட நகரான தருமபுரியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கோட்டையாகும். இவ்வூரும் இப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இக்கோட்டையில் காலபைரவர் கோயில், சோமேசுவரர் கோயில், சென்னராயப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. வழிவழியாக அதியமான் கோட்டை இருந்த இடமாக கூறப்பட்ட இடத்தில் 1981, 1982 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்ககாலத்ததாக கருதப்படும் கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், வண்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள், வில் அம்பு போன்ற கீறல்கள் உள்ள பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் சுடுமண் மணிகள், இரும்பு ஆணிகள், போன்றவையும் கிடைத்தன. இங்கு மேடையுடன் கூடிய கெட்டியான களிமண்ணால் அமைக்கப்பட்ட தரைப் பகுதியும் கண்டறியப்பட்டது. இவற்றின் காலம் கி.மு.100 முதல் 300வரையிலான காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் சங்க காலத்தில் இருந்து கோட்டை இருந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை. இங்குள்ள கோயில் கல்வெட்டுகளில் இந்த ஊர் மகேந்திர மங்கலம் என்றும் இவ்வூர் இறைவன் மயிந்தீசுவரமுடையார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி முட்டை வடிவிலான கோட்டையின் எஞ்சிய பகுதியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தினர். அவ்வாறு நடத்திய அகழாய்வில் இக்கோட்டை கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன்படி பார்த்தால் பிற்கால சோழர் காலத்தில் இங்கிருந்து ஆண்டுவந்த இராசராச அதியமான் என்னும் அதியமான் மரபின் சிற்றரசன் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் 

 

எங்கள் ஊர் அதியமான் கோட்டையில் சென்ன ராய பெருமாள் கோவில் என்ற வைணவ கோயில் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது 

 

இக்கோயிலில் எந்தக் கல்வெட்டுகளும் இல்லை என்றாலும், இக்கோயிலின் மகாமண்டபத்தின் விதானத்தில் மகாபாரத, இராமாயண காட்சிகளை விளக்கும் பழங்கால சுவர் ஓவியங்கள் உள்ளன. இவை சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கோயிலாகும். திருவண்ணாழியில் திருமகள், நிலமகள் ஆகியோருடன் சென்னராயப் பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார். பெருமாளில் நான்கு கரங்களில், பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் முன்னிரு கரங்களில் வலக்கை வரத முத்திரையுடனும், இடக்கை தொடையில் பதிந்தபடியும் உள்ளன. அர்த்தமண்டபத்தில் வலப்புரத்தில் ஆழ்வார்களான நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய மூவரின் திருஉருவங்கள் உள்ளன. கோயிலின் விமானம் மூன்று தளங்களைக் கொண்டு கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. 

 

மேலும் அதியமான் கோட்டையில் காலபைரவர் திருக்கோயில் உள்ளது

இக்கோயிலை கட்டியது அதியமான் என கூறப்படுகிறது ஆனால் இதற்கு ஆதாரமில்லை. உண்மையில் இக்கோயிலைக் கட்டியது யார் என கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போசள 

மன்னனான வீர நரசிம்மனின் தானைத்தலைவனான 

மாதவ தண்ட நாயக்கனின் அமைச்சனான பரமெய் சகானி என்பவராலேயே இக்கோயில் கட்டப்பட்டது என கி.பி 1235 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிக்கிறது. அக்காலத்தில் இந்த கோயில் பரமேசுவரமுடையார் திருக்கோயில் என அழைக்கப்பட்டு வந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

 

முத்துக்குமார்

 சஞ்சீவி மலை