tamilnadu epaper

எங்கள் ஊர் கரூர் சிறப்பு.

எங்கள்  ஊர்  கரூர்  சிறப்பு.

சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே, 'கருவூர்' என்றழைக்கப்பட்டு, 'கரூர்' என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

 

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது.

 

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கருவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சேர, சோழ, பாண்டிய, கங்க மன்னர்கள், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

2000 ஆண்டுகள் பழமைமிக்கது கரூர்.

அமராவதி ஆற்றின் கரையில் கரூர் அமைந்துள்ளது. இங்கே உள்ள மண் வகைகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன, இவை காவிரி டெல்டாவில் பொதுவான பயிர்களுக்கு உகந்தவை.கரூர், தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே, ஈரோடிற்குத் தென் கிழக்கே, சேலத்திற்குத் தெற்கே, மதுரைக்கு வடக்கே , கோவைக்குக் கிழக்கேயும் அமைந்துள்ளது.

அருகில் உள்ள பெரிய நகரங்களுடன், சாலைகள் வழியாகவும், இருப்புப் பாதைகள் வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இது, பல நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்குகிறது. மேலும் கரூரில் இருந்து, சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்புகள் உள்ளன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மற்றும் பிற மாநிலங்களுக்கு, பேருந்துகள் உள்ளன.

பொன்னணியார் அணை

 

கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலா தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

மாயனூர் கதவணை

 

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் கதவணை சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

அம்மா பூங்கா 

 

திருக்காம்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள அம்மா பூங்கா சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.

 

அனுப்பியவர் பெயர் மற்றும் முகவரி:

 

வ. லட்சுமி,

நங்கநல்லூர்,

சென்னை 600 061