*வீடுகள்*
விளை நிலத்தில்
பயிர் செய்கிறார்கள்
வீடுகளை!
*குருவி*
தன்னையே
கொத்திக் கொள்கிறது
கண்ணாடியில்
சிட்டுக்குருவி!
*வேதனை*
ஏன் இப்படி
தேய்கிறாய் நிலவே
உனக்குமா
காதல் வேதனை?
*பாசக் கொலை*
பாசக் கொலை
செய்கிறான்
குழந்தையை கடித்த
கொசுவை!
*யாருக்கு?*
எப்போதும் வந்த
கனவுகள் நின்றுவிட்டன,
வயதாகிப் போனது
கனவுக்கா,
எனக்கா?
*நினைவு பறவை*
கூண்டுகள் இல்லாத
நினைவு பறவை
உன்னையே சுற்றித்
திரிகிறது...
*உலகம்*
உன் சுவடுகளின்
வாசலில்
மனசை வைத்துப் போகிறேன்,
வார்த்தைகளற்ற
உலகம்
அது ஒன்றுதான்!
*வெளி*
உலகத்தை
உள்வாங்கியபடி
வெளியே நிற்கிறது
ஜன்னல்!
*சிற்பம்*
கல்நெஞ்சில்
செதுக்கியகாதல்சிற்பம்
எப்போது கண் திறக்குமோ?
வெ.தமிழழகன் ,எம்ஏபிஎட்
சேலம்