அமெரிக்காவில் உறைபனி, பனிப்புயலுக்கு 15 பேர் பலி!

அமெரிக்காவில் உறைபனி, பனிப்புயலுக்கு 15 பேர் பலி!


 

அமெரிக்காவின் பல மாகாணங்களில் சக்திவாய்ந்த பனிப்புயல், உறைபனிக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவின் நியு மெக்ஸிகோவில் ஏற்பட்ட உறைபனி மற்றும் பனிப்புயலுக்கு சுமார் 15 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பனிப்புயலால் குறிப்பாக டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி மற்றும் டென்னசி ஆகிய மாகாணங்களில் பரவலான மின்வெட்டைச் சந்தித்துள்ளது. 20 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.


அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. ஓகியோ பள்ளத்தாக்கு, மத்திய தெற்கு முதல் இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.


தெற்குப் பகுதியில் நிலவிவரும் பனிப்புயலால் கடுமையான உள்கட்டமைப்பு சேதங்கள் பதிவாகியுள்ளன. அங்குப் பனியால் மூடப்பட்ட சாலைகள், மரங்கள் மற்றும் அறுந்துவிழுந்த மின்கம்பிகளால் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலைகள், குடியிருப்புகளின் மேற்கூரைகள் என எங்கும் பனிக்கட்டிகளாகக் காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.


பிலடெல்பியா, நியுயார்க், பாஸ்டன் உள்ளிட்ட பல நகரங்களில் கடும் உறைபனி காணப்படுகிறது. பல பகுதிகளில் பனி மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்த பனிப்புயலின் தாக்கம் நாடு முழுவதும் உணரப்பட்டது.


அமெரிக்காவின் 48 மாகாணங்களில் 56 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி பனியால் மூடப்பட்டிருந்தது. நியூ மெக்சிகோ முதல் மெய்ன் வரை உள்ள 18 மாகாணங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.


ஞாயிறன்று 11,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தான நிலையில், திங்கள்கிழமை மேலும் 6,000 அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமையும் அதிகளவிலான விமானங்கள் ரத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


2020 கரோனா முடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் லட்சக்கணக்கான விமானங்கள் முடக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இது டல்லாஸ் முதல் பாஸ்டன் வரையிலான முக்கிய விமான நிலையங்களைப் பாதித்தது. விமானச் சேவை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பப் பல நாள்கள் ஆகும் என்று விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.


அமெரிக்காவின் பனிப்புயல், உறைபனிக்கு பல்வேறு பகுதிகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை குறைவு மற்றும் பனியை அகற்றும் சம்பவங்களில் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளன. தளவாடங்கள் மற்றும் விநியோகப் பணிகளுக்கு உதவுவதற்காக சுமார் 500 தேசியக் காவல் படையினரை அனுப்பியிருப்பதாக மிசிசிப்பி ஆளுநர் டேட் ரீவ்ஸ் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%