அரசியலமைப்பு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது: ஸ்டாலின் கருத்து
சென்னை, செப்.16-–
வக்பு மசோதாவில் முக்கிய திருத்தங்களுக்கு விதித்த தடை, அரசியலமைப்பு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
* வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை.
* வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அந்த சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை.
* ‘வக்பு பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட கலெக்டருக்கான அதிகாரத்துக்குத் தடை. (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)
* மத்திய வக்பு வாரியத்தில் 4-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.
மத்திய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு அமைந்துள்ளது.
இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடுஅரசும் மத்திய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த உத்தரவு முஸ்லிம்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட்டு பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.