இரக்கம் காட்டாத இஸ்ரேல்..ஆக்ரோஷமாக அமெரிக்கா! ஈரானுக்கு எழ முடியாத அடி! பற்றி எரியும் மத்திய கிழக்கு
டெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் அமரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, இந்தப் போர் தற்போது ஆறாவது நாளை எட்டியுள்ளது. இந்த மோதலில் பல்வேறு பகுதிகளில் கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, ஈரானில் இதுவரை 1,000-ஐ தாண்டியோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமானது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் நகரின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நகரின் முக்கிய பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் ஈரானின் ஏவுகணை உற்பத்தி மையங்கள் மற்றும் அணுசக்தி தொடர்பான முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஈரானின் ராணுவ திறனை கட்டுப்படுத்துவதே இந்த தாக்குதல்களின் முக்கிய நோக்கம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகள் இருப்பதாக கூறப்படும் லெபனான் நாட்டிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக லெபனானில் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்பு, ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
ஜெருசலேமில் 3-வது கோவில்? இஸ்ரேலின் அதிரடித் திட்டம்! உலக நாடுகளை அதிரவைக்கும் 'சிவப்பு பசு' ரகசியம்
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் லெபனானின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதில் 50 பேர் உயிரிழந்ததாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேநேரத்தில் ஈரானும் பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் மூலம் பல வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்கள் தவிப்பு! சென்னைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு வருமா?
குறிப்பாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் சில சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் இஸ்ரேலின் சில நகரங்களையும் குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதையடுத்து தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக செயல்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் எஃப்ரின் பேசுகையில் ஈரானில் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக மதத் தலைவர்கள் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்த கூட்டம் ஈரானின் குவாம் நகரில் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்ததாகவும், அந்தக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது ராணுவத்தினர் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் அணு ஆயுதம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் விளக்கம் அளித்துள்ளது. அணு ஆயுத தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து நடைபெறவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், யுரேனியத்தை செறிவூட்டுவது தங்களது உரிமை என்றும், தங்களது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது என்றும் ஈரான் கூறியுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தங்களது தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்லாமிய புரட்சி படை (Islamic Revolutionary Guard Corps) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வளைகுடா பிராந்தியத்திலும் பதற்றம் அதிகரித்துள்ளது. ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து இரண்டு ட்ரோன்கள் தாக்கியதாக சவுதி பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் துபாய் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பார்க்கிங் பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் ஈரானில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் ரெட் கிரசண்ட் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு தகவலின்படி இந்த எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்காவின் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த போர் பதற்றம் உலக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.