இலங்கைச் சிறையில் இருக்கும் 62 மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைச் சிறையில் இருக்கும் 62 மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்



ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இன்று (23–ந் தேதி) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.


அக்கடிதத்தில், 22.12.2025 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23.12.2025 அன்று சிறைப்பிடித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப் படுவதாகவும், இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துவதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலையோடு தெரிவித்துள்ளார்.


எனவே, இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு, மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


தற்போது, ​​தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (2024–ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் உட்பட) இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் மேலும் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%