எச்1பி விசா கட்டண உயர்வு கெடுபிடி: அதிக நிபந்தனைகள் இல்லாத ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா - முழு விவரம்

எச்1பி விசா கட்டண உயர்வு கெடுபிடி: அதிக நிபந்தனைகள் இல்லாத ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா - முழு விவரம்


எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு அந்த நாட்டு நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.


அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேர்வதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தின் முன்னாள் மூத்தஅதிகாரி எஸ்தர் கிராபோர்டு கூறியதாவது: ‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தார். ஆட்சி நிர்வாகம் மாறிய காலத்தில் எக்ஸ் வலைதளத்தில் பல்வேறு சவால்கள் எழுந்தன. அப்போது இந்திய பொறியாளர்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டனர். நேரம் காலம் பார்க்காமல் கூடுதலாக உழைத்தனர். எக்ஸ் தளத்தை தொடர்ந்து இயங்கச் செய்தனர். அவர்களோடு சீன பொறியாளர்களும் கடினமாக உழைத்தனர். இந்திய, சீன பொறியாளர்களால்தான் எக்ஸ் வலைதளம் காப்பாற்றப்பட்டது.


அமெரிக்கர்கள் மத்தியில் வெளிநாட்டு பணியாளர்கள் மீது கடும் அதிருப்தி காணப்படுகிறது. இது நாட்டின் நலனுக்கு எதிரானது. சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களால்தான் அமெரிக்காவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். இவ்வாறு எஸ்தர் கிராபோர்டு தெரிவித்துள்ளார். இதேபோல ஏராளமான அமெரிக்க நிபுணர்கள், தொழிலதிபர்கள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


அவர்கள் கூறியதாவது: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் தகவல் தொழில்நுட்ப தலைமையகமாக கருதப்படுகிறது. இங்கு செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர். மேலும் சிலிகான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர்.


நாசா, ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐபிஎம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அமெரிக்க அரசின் எச்1பி விசா கட்டண உயர்வால் இந்திய பொறியாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை தங்கள் நாடுகளுக்கு ஈர்க்க தீவிர முயற்சி செய்து வருகின்றன. இது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.


இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி வீழ்ந்தது. அப்போது, ஜெர்மனியில் இருந்து மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தனர். தற்போது எச்1பி விசா கெடுபிடியால் உயர் திறன்சார் பணியாளர்களை அமெரிக்கா இழக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.


வைரலாகும் எலான் மஸ்க் கருத்து:எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அவரது முந்தைய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதில் மஸ்க் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் போன்ற முன்னணி நிறுவனங்களை உருவாக்கி உள்ளேன். ஆனால், எச்1பி விசா மூலமாகவே நான் அமெரிக்காவில் நுழைந்தேன். இந்த விவகாரத்தில் என்னோடு யார் விவாதம் செய்ய முயன்றாலும் அவர்களை எதிர்க்க தயாராக உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.


சீனாவின் ‘கே’ விசா அறிமுகம்: அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி அளிக்க வேண்டும். பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சூழலில், தற்போது எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது.


சீனா சார்பில் 12 வகையான விசாக்கள் நடைமுறையில் உள்ளன. வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஆர் விசா, இசட் விசா வழங்கப்படுகிறது. இதில் ஆர் விசாவில் 180 நாட்களும், இசட் விசாவில் ஓராண்டும் சீனாவில் தங்கியிருந்து பணியாற்ற முடியும்.இந்த சூழலில், புதிதாக கே விசாவை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அறிமுகம்செய்ய உள்ளோம். இதற்கான கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விசாவைப் பெற சீன நிறுவனங்களின் உத்தரவாதம் தேவையில்லை. அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். நீண்டகாலம் சீனாவில் தங்கி பணியாற்றலாம்.


அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கே விசாவை எளிதாக பெறலாம். கல்வி பயிற்றுவித்தல், ஆராய்ச்சித் துறையில் இருக்கும் இளம் வல்லுநர்களும் கே விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். 2035-ல் உலகின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப தலைமையகமாக சீனாவை மாற்றஅதிபர் ஜி ஜின்பிங் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக இளம் ஆராய்ச்சியாளர், மிக சிறந்த ஆராய்ச்சியாளர் என்ற 2 திட்டங்களை சீன அரசு செயல்படுத்த உள்ளது. இவ்வாறு சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



எச்1பி விசா: அமெரிக்க அரசின் அறிவிப்பால் விமானத்தில் இருந்து அவசரமாக இறங்கிய இந்தியர்கள்


வாஷிங்டன்: விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது, இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.


அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கடந்த 19-ம் தேதி இந்தியாவுக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் இந்திய மென்பொறியாளர்கள் அதிக அளவில் இருந்தனர். அப்போது எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையறிந்த இந்திய மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து உடனடியாக கீழே இறங்கினர். பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பினர்.


விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இதுதொடர்பான காட்சிகளை தனது மொபைல்போனில் படம்பிடித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். ‘‘மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இந்திய பயணிகள் அவசரமாக வெளியேறிவிட்டனர்’’ என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு வீடியோவில், பயணிகள் நடைபாதையில் குழப்பத்துடன் நிற்பதையும், சிலர் விசா கட்டணம் தொடர்பான தகவலை அறிய தங்களது மொபைல்போன்களை பதற்றத்துடன் பயன்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.


இந்திய பயணிகளின் இக்கட்டான சூழலை புரிந்துகொண்ட விமான கேப்டன் கூறும்போது, ‘‘அன்பான பயணிகளுக்கு! முன்னெப்போதும் இல்லாத புதிய சூழலை எதிர்கொண்டுள்ளோம். பல பயணிகள் எங்களுடன் பயணிக்க விரும்பவில்லை என்பதை அறிகிறோம். இந்தியாவுக்கு விமானம் புறப்படுவதற்கு முன்பு யார் வேண்டுமானாலும் இறங்கிச் செல்லலாம்’’ என்று அறிவித்தார். இந்த குழப்பத்தால் எமிரேட்ஸ் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.


பிரிட்டனில் விசா கட்டணம் ரத்து: உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்களை ஈர்க்க பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீவிரமாக ஆலோசித்து வருவதாக முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, உயர் தொழில் திறன் பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விசா கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா கட்டணம் ரூ.90,000 முழுமையாக ரத்து செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.


காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் கைது


ஒட்டாவா: ​காலிஸ்​தான் பிரி​வினை​வாத அமைப்​பு​கள் அமெரிக்​கா​வில் ‘சீக்​கியர்​களுக்​கான நீதி' (எஸ்​எப்​ஜே) என்ற பெயரில் செயல்​பட்டு வரு​கின்​றனர். இதன் கனடா நிர்​வாகி​யாக இந்​திரஜித் சிங் கோசல் (36) செயல்​பட்டு வந்​தார்.


குர்​பத்​வந்த் சிங் பன்​னுனின் வலதுகர​மாக கருதப்​படும் அவரை கனடா போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். கனடா​வின் இந்து கோயி​லில், பக்​தர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக, இந்​திரஜித் சிங் கோசல் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் கைது செய்​யப்​பட்டு ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%