எரிபொருள் ஸ்விட்சில் மீண்டும் பிரச்சினை: போயிங் 787 விமானங்களை ஆய்வு செய்கிறது ஏர் இந்தியா
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தனது போயிங் 787 ட்ரீம் லைனர் விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2025 ஜூன் 12-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் அடுத்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அந்த விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் (எப்சிஎஸ்) அணைக்கப்பட்ட நிலையில் இருந்ததும் இதனால் எரிபொருள் சப்ளை நின்றதுமே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா நிறுவனம் தனது அனைத்து போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தியது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் (ஏஐ-123) லண்டனில் பெங்களூரு வந்தது.
இதன் பிறகு விமான இன்ஜினை மீண்டும் 'ஸ்டார்ட்' செய்தபோது எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்ச் தானாகவே 2 முறை ‘Run’ நிலையில் இருந்து ‘Cut-off’ நிலைக்கு மாறியது. இதையடுத்து ஸ்விட்ச் செயல்பாட்டில் கோளாறு இருப்பதாக விமானி புகார் அளித்ததை தொடர்ந்து அந்த விமானம் தற்காலிகமாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தனது அனைத்து போயிங் 787 மற்றும் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. மேலும் இந்த விவகாரத்தை விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?