ஏஐ போலி மருந்து சீட்டால் ஆபத்து: பிரதமருக்கு மருந்தாளுநர்கள் எச்சரிக்கை கடிதம்
புதுடெல்லி: “நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதற்காக, ஏஐ மூலம் போலியாக மருத்துவர்களின் பரிந்துரை கடிதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு அகில இந்திய வேதியிலாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் சங்கம் (ஏஐஓசிடி) எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு ஏஐஓசிடி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் போலியாக மருத்துவர்களின் மருந்து பரிந்துரை சீட்டுகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் போலி மருத்துவமனைகளின் பெயர்கள், போலி நோயாளிகளின் தகவல்கள் அடங்கியுள்ளன. அவற்றின் மூலம் தடை செய்யப்பட்ட மருந்துகள் ஆன்லைனில் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு பொதுமக்களின் உடல்நலத்துக்கு மிக அச்சுறுத்தலாக உள்ளது.
குறிப்பாக ஏஐ.யால் உருவாக்கப்பட்ட மருந்து சீட்டுகளின் மூலம் ஆன்லைனில் அதிகமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாட்டிக்), மனநல சிகிச்சைக்கு வழங்கப்படும் மருந்துகள், ஓபியம் கலந்த மருந்துகள் மற்றும் அட்டவணை எச் மற்றும் அட்டவணை எக்ஸ் ஆகியவற்றில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் விற்கப்படுகின்றன. இது பொதுமக்களின் உடல்நலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மருந்து சீட்டுகளை சில ஆன்லைன் இணையதளங்கள் ஏற்றுக் கொண்டு மருந்துகளை விநியோகிக்கின்றன. இது சட்டவிரோதமாகும். இதுபோன்ற செயல்கள் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையை சீர்குலைப்பதாகும். மேலும், இ பார்மசி என்ற பெயரில் சட்டவிரோதமாக செயல்படும் இணையதளங்கள், ஜிஎஸ்ஆர் 817(இ) மற்றும் ஜிஎஸ்ஆர் 220 (இ) ஆகிய அரசு அறிவிக்கையின் அடிப்படையில் இயங்குவதாக கூறிக் கொள்கின்றன. இது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்திக் கொள்வதாகும்.
2 அறிவிக்கைகளை அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை ஆன்லைன் விற்பனைக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மருந்து சீட்டுகளை முறைப்படி ஆராயாமல், பொறுப்பில்லாமல் இதுபோல் விற்பனை நடக்கிறது. எனவே, ஏஐ மூலம் போலி மருந்து சீட்டுகள் உருவாக்கப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும். சட்டவிரோதமாக ஆன்லைனில் மருந்துகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் ஏஐஓசிடி கூறியுள்ளது.
இதுகுறித்து ஏஐஓசிடி பொதுச் செயலாளர் ராஜீன் சிங் கூறும்போது, “மருந்து சீட்டுகளை நேரடியாக ஆய்வு செய்ய முடியாத நிலையில், ஆன்லைனில் வழங்கப்படும் மருந்து சீட்டுகள் உண்மையா அல்லது போலியா என்பதை வேறுபடுத்தி பார்ப்பது கடினம். அதேநேரத்தில் நேரடியாக மருத்துவர்கள் வழங்கும் மருந்து சீட்டுகளில் சந்தேகம் ஏற்பட்டால் குறிப்பிட்ட மருந்துகளை மருந்தாளுநர்கள் வழங்குவதில்லை” என்றார்.