பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு
துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் பெரும்பாலானவற்றை மீண்டும் திறக்க துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 25 பேர் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, பாதுகாப்புக் கருதி 48 சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 10 மாதங்களாக காஷ்மீர் சுற்றுலா பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சுற்றுலாத் தலங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். அதன் அடிப்படையில் தற்போது 14 சுற்றுலாத் தலங்களை உடனடியாக திறக்க உத்தரவிட்டுள்ளேன்.
அந்தப் பகுதிகளில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி சென்று வரலாம். அதற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மொத்தமுள்ள 48 சுற்றலாத் தலங்களில் இதுவரை 42 சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 6 சுற்றுலாத் தலங்கள் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் வந்து சென்றுள்ளனர். தற்போது ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் காஷ்மீரில் சுற்றுலா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?