கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
சென்னை:
கிண்டி பேருந்து நிலையத்தில் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் தடத்திலும், தாம்பரம் - பிராட்வே பேருந்து வழித்தடத்திலும் கிண்டி முக்கிய மையமாக உள்ளது.
கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இருப்பதால், பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், கிண்டி ரயில் நிலையம் ரூ.13.50 கோடியில் மேம்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கிண்டி ஜிஎஸ்டி சாலையை ஒட்டியுள்ள சுரங்கப்பாதை அருகில் பெரிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. பிராட்வேயில் அமைவது போல, நவீன பேருந்து முனையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கிண்டி பகுதி பேருந்து, ரயில், மெட்ரோ ரயில்கள் இணையும் முக்கிய சந்திப்பாக உருவெடுத்துள்ளது. எனவே, தற்போதுள்ள கிண்டி பேருந்து நிலையத்தை பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாகமாற்ற இருக்கிறோம்.
நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வணிகவளாகம், வாகன நறுத்துமிடங்கள், பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் பிரம்மாண்ட நடைமேடை மேம்பாலம், நகரும் படிக்கட்டுகள், வெளிப்புற நடைபாதைகள், இணைப்பு வாகன வசதி நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
இதன் திட்ட மதிப்பு ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி இருக்கும். கிண்டியை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றினால், தற்போது உள்ளதைக் காட்டிலும் கிளாம்பாக்கம், பிராட்வே, கோயம்பேடு, திருவான்மியூர், அண்ணாசதுக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் வெளியூர் பேருந்துகளை அதிகரிக்கலாம்.
இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனங்களை தேர்வு செய்து, அடுத்த 4 மாதங்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதன்பிறகு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அடுத்தகட்ட திட்டப்பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.