காட்சி: 1
----------------
எத்தனை நாளா இந்த வலி இருக்கு ?
சார் ... ரெண்டு நாளா இருக்கு சார் ....! அதுவும் சாப்பிட்ட பிறகு தான் வலி அதிகமா இருக்கு...!
என்றார் நாராயணன்.
டாக்டர் ராமநாதன் ஸ்டெதஸ் கோப்பை நாராயணனின் நெஞ்சில் வைத்து பார்த்தார். பிறகு நாராயணனை மேஜையின் மீது படுக்க வைத்து வயிற்றை அழுத்திக் கொண்டே வலிக்குதா! என்றார்.
சார்... வலியில்லை என்றார் நாராயணன்.
சரி... எந்திரிங்க... என்று சொல்லிவிட்டு, டாக்டர் தனது கைபேசியை எடுத்து கூகுளில் வயிற்று வலிக்கு மாத்திரையைத் தேடத் துவங்கினார்.
காட்சி:2
---------------
என்னாங்க... எவ்வளவு நாளா கேட்டுக் கிட்டே இருக்கேன்... கடைக்கு எப்பப் போகலாம் என்றாள் குடும்பத் தலைவியான சரிதா...
ஆமாம்... நீயும் கேட்டுகிட்டே தான் இருக்கே.... அது என்ன புடவை... கொஞ்சம் சொல்லு...!
அதாங்க... காட்டன் மிக்ஸ் பட்டுப் புடவை.
அது என்ன காட்டன் மிக்ஸ் பட்டுப் புடவை. இது புதுசால்ல தெரியுது! என்று மனைவியிடம் கேட்டார் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகம்.
அந்த கைபேசியை கொஞ்சம் எடு என்றார்.. மனைவியிடம்...
என்னாங்க... புடவை கேட்டா... கைபேசியை கேட்கறீங்க என்றாள் சரிதா...
சரிதா எடுத்துக் கொடுத்த கைபேசியை கையில் வாங்கிக் கொண்டு கூகுளை திறந்து மனைவி கேட்ட புடவையைத் தேடத் தொடங்கினார்...
காட்சி:3
---------------
திருவாரூர்ல மடப்புரம்னு ஒரு இடம் இருக்காம்... அங்க தெட்சிணாமூர்த்தி மடம்னு ஒன்னும் இருக்காம்... அது உங்களுக்கு தெரியுமா என்று தனது பால்ய சிநேகிதர் பலராமனிடம் கேட்டார் ராமமூர்த்தி.
ஏன் எதுக்குக் கேட்கறீங்க? அங்க போகப் போறீங்களா என்றார் பலராமன்..
திருவாரூர்ல நீங்க சொல்ற மாதிரி மடம் ஒன்னு இருக்கு!
ஆனா அது இருக்கற இடம் தெரியல.... சரி... இருங்க.. ஒரு நிமிஷம்.. இதோ பார்த்து சொல்றேன் என்றபடி, தனது பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து கூகுளுக்குள் நுழைந்தார் பலராமன்.
காட்சி:4
---------------
அம்மா... எனக்கு இன்னைக்கு பீசா சாப்பிடனும் போல இருக்கு!
பீசால்லாம் வேண்டாம்பா... உடம்புக்கு ஒத்துக்காதுப்பா... சொல்றதை கேளு என்றாள் சுந்தரின் அம்மா லெட்சுமி..
போனவாரம் நான் கேட்டதுக்கு இதே மாதிரிதான் நீ சொன்னே... இன்னைக்கு எனக்கு பீசா வேணும் என்று பிடிவாதம் பிடித்தான் சுந்தர் ...
எங்க கிடைக்கும்னு எனக்கு தெரியலேயே என்றாள் சுந்தரின் அம்மா லெட்சுமி...
அம்மா... உன் போனை கொண்டா... நம்மவூருல்ல பீசா எங்க கிடைக்கும்னு கூகுள்ல பார்க்கலாம் என்றாம் 5-ம்வகுப்பு படிக்கும் சுந்தர்...
இப்படித்தான் நமது வாழ்வில் நம்மோடு வந்து ஒட்டிக் கொண்ட கைபேசியைப் போன்று, நம் அன்றாட வாழ்வில் கூகுளும் நம்மோடு உறவாடிக் கொண்டிருக்கிறது!
-----------------------------------
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.