சபரிமலைக்கு வந்த முதல் ஜனாதிபதி இருமுடி கட்டி, 18ம் படி ஏறி ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
திருவனந்தபுரம், அக். 22–
இருமுடி கட்டி, 18ம் படி ஏறி சபரிமலை கோவிலில் ஐயப்பனை தரிசனம் செய்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலையில் கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதியை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். பிறகு சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர், இரவில் அங்கு ஓய்வெடுத்தார்.
இதனையடுத்து ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஜனாதிபதி புறப்பட்டார். இதற்காக இன்று காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரமாடம் சென்ற அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார். சபரிமலைக்கு செல்லும் அவர் பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார்.
பின்பு பம்பையில் கணபதி கோவிலில் ஜனாதிபதிக்கு இருமுடி கட்டும் சடங்கு நடந்தது. இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தலையில் இருமுடி வைத்துக்கொண்டு, 18ம் படி ஏறி ஐயப்பன் சந்நிதானத்திற்கு வந்தார். அங்கு அவரிடமிருந்த இருமுடியை பெற்றுக்கொண்டு ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. ஜனாதிபதியுடன் பாதுகாவலர்களும் இருமுடி ஏந்தி வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்பினார்.
ஜனாதிபதி வருவது
முதல்முறை
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ஒருவர், தன் பதவி காலத்தில் சபரிமலைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
ஜனாதிபதி சபரிமலைக்கு வருவதையொட்டி 2 நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது.