இப்படி ஒரு காலம் திரும்புமா மீண்டும் வசந்தம் வீசுமா கவலை இல்லா மனம் கிடைக்குமா அனுபவி ராஜா அனுபவி என்ற நிலை வருமா என்பது போல இனித்தது .
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட ஒரு மாணவன் தந்த நெகிழ்சியான கருத்து இந்த சிறுகதையாக வெளியாகிறது .
" நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாம் ஒரு வாரம் நந்திமங்கலத்தில் நடைபெற்றது . இதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் .
ஒவ்வொரு நாளும் காலையில் தூய்மைப் பணி பிறகு தேநீர் நேரம் பிறகு கருத்தரங்கம் பிறகு மதிய உணவு பிறகு களப்பணி மீண்டும் தேநீர் நேரம் பிறகு கலந்தாய்வு கூட்டம் .
இப்படி ஏழு நாட்களும் கிராமத்தில் எழில் பசுமை ஆலய தரிசனம் என்று இனம் மதம் சாதி மொழி தாண்டி இன்பச் சுற்றுலா போன்று அழகாக நகர்ந்தது .
மாணவர்கள் ஒன்றாக கூடி பேசி சிரித்து விளையாடி ஆட்டம் போட்டு கிண்டலடித்து காலம் நகர்ந்தது மன மகிழ்ச்சியோடு .
வீட்டு கவலைகள் குடும்பப் பிரச்சனைகள் ஏழ்மை நிலை மறந்து மனதில் தூய்மை உடலில் புத்துணர்ச்சி வாழ்வில் புது வசந்தம் என்று பொங்கி எழுந்தது .
சேவையில் கிடைத்த மன நிறைவும் உத்வேகமும் கடல் கடந்து வெளிநாடு சென்று உழைத்தாலும் கிடைக்காது .
மூவர் அணி நால்வர் அணி ஐவர் அணி என்று களம் புகுந்து வியர்வை சிந்த உழைத்து விட்டு மரநிழலில் உணவை அனைவருமாக பகிர்ந்து உண்டு சிறிது சாய்ந்து ஓய்வெடுத்து மீண்டும் பணி செய்த போது சொர்க்கம் அருகில் தான் தெரிந்தது ..."
நிறைவு விழா நாளில் பல பெரிய மனிதர்கள் கையால் நினைவுப்பரிசு வாங்கிய தருணம் . மாணவர்கள் தங்கள் அனுபவங்களை தனித்தனியாக பகிரும் போது வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீர் விலை மதிப்பில்லாதது .
பிரியா விடை ஊர் மக்கள் தந்த போதும் அனைவரிடமும் விடை பெற்று திரும்பும் போதும் எதையோ அந்த ஊரில் விட்டுச் சென்ற ஒரு ஆதங்கம் மனதில் தெரிந்தது .
வாய்ப்பு அளித்த கல்லூரி முதல்வருக்கும் ஒரு வாரம் வழி நடத்தி சென்ற ஆசிரியர்களுக்கும் கிராமத்தில் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் , ஒவ்வொரு நாளும் புதுப்புது தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி சொல்லி விட்டு ... "
பஸ்ஸில் ஏறி ஊருக்கு பயணிக்க அமர்ந்த போது உடலும் மனமும் கனத்தது .
சேவை என்பது வெறும் வார்த்தையல்ல அது ஒரு உணர்வின் மறு உருவம் என்பது ஆழ்மனம் தொட்டு புரியத் தொடங்கியது .
நாட்டு நலப் பணி திட்டத்தின் உயரிய நோக்கம் வழி காட்டுதல் தேசத்தை முன் எடுத்து செல்லும் என்பது மட்டும் எங்களுக்கு நன்றாக புரிந்தது.
இது தான் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பதோ என்று சிந்திக்க வைத்தது ..."
- சீர்காழி.ஆர். சீதாராமன் .