சென்னையில் ஜன.8ல் புத்தகத் திருவிழா முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
சென்னையில் புத்தகத் திருவிழா ஜனவரி 8ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. இதை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறா.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் புத்தக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2026 புத்தக கண்காட்சி மற்றும் பபாசி விருது பெறுபவர்கள் குறித்து பபாசி தலைவர் சண்முகம் அளித்த பேட்டி வருமாறு-
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 49-வது புத்தக கண்காட்சியை ஜனவரி 8ம் தேதி மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த புத்தக திருவிழா ஜனவரி 21 ம் தேதி வரை 14 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டும் 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி வழங்கப்படுகிறது. இந்த புத்தக திருவிழாவிற்கு 15 - 20 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 25 லட்சம் வாசகர்களையாவது வரவழைப்பது தான் எங்களது நோக்கம்.
கடந்த முறையை விட இந்த ஆண்டு இரு மடங்கு வாசகர்களின் வருகையை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறோம். புதிய படைப்புகளை கொண்டு வரும் முயற்சியில் அனைத்து பதிப்பகங்களும் ஈடுபட்டு வருகின்றன.
இலவசம்
புத்தக திருவிழா நடக்கும் மைதானத்தில், வாசகர்களுக்கு தேவையாக குடிநீர், கழிப்பறை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறோம். புத்தக திருவிழாவிற்கு வரும் வாசகர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 என்பதை மாற்றி, இலவச அனுமதி வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். புத்தக திருவிழாவின் 14 நாட்களும் சிறந்த பேச்சாளர்கள், நிபுணர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும், பல்வேறு மாநிலங்களிலிருந்து புகழ் பெற்ற பல பப்ளிகேஷன்ஸ் கலந்து கொள்ளும் நிகழ்வும் நடக்கவுள்ளது.
விருது பெறுவோர் விவரம்
கலைஞர் பொற்கிழி விருதினை கவிதை - கவிஞர் சுகுமார், சிறுகதை - ஆதவன் தீட்சண்யா, நாவல் - இரா. முருகன், உரைநடை - பேராசிரியர் பாரதி புத்திரன், நாடகம் - கருணா பிரசாத், மொழிபெயர்ப்பு - வ.கீதா ஆகிய 6 பேர் பெறுகின்றனர். இந்த விருதுகளை ஜனவரி 8 அன்று முதலமைச்சர் ஸ்டாலின், வழங்குகிறார். அத்துடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை காசோலையையும் வழங்கஉள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?