தடுப்புச் சுவரை உயர்த்துதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்பட ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாயில் தூர்வாரும் பணி : உதயநிதி துவக்கி வைத்தார்

தடுப்புச் சுவரை உயர்த்துதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்பட  ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாயில்  தூர்வாரும் பணி : உதயநிதி துவக்கி வைத்தார்

சென்னை, செப். 9–


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருகம்பாக்கம் கால்வாயில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்றது நிகழ்ச்சி.


சென்னை மாநகராட்சியானது 81.13 கி.மீ நீளத்திற்கு 44 நீர்வழி கால்வாய்களை பராமரித்து வருகிறது.


விருகம்பாக்கம் நீர்வழிக்கால்வாய் விருகம்பாக்கத்தில் உள்ள புவனேஷ்வரி நகரிலிருந்து தொடங்கி சின்மயா நகர், சாலிகிராமம், எம்.எம்.டி.ஏ காலனி வழியாக கூவம் ஆற்றினை சென்றடைகிறது. விருகம்பாக்கம் நீர்வழிக் கால்வாயின் நீளம் 6.70 கி.மீ ஆகும்.


இந்த நீர்வழிக் கால்வாயின் அகலம் 8 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை உள்ளது.


விருகம்பாக்கம் நீர்வழிக் கால்வாயில், நீரியியல் வல்லுநர் மூலம் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையின் அடிப்படையில், மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து கால்வாயில் 6.36 கி.மீ. நீளத்திற்கு 1,07,200 கனமீட்டர் கொள்ளளவிற்கு தூர்வாரும் பணி, 1,490 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் பக்கச்சுவரினை உயர்த்தி, அதன் மேல் சங்கிலிவேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


மேலும், மேம்பாட்டு பணிகள் குறித்த திட்டவரைபடத்தினை பார்வையிட்டு, கால்வாய் செல்லும் பகுதிகளின் விவரங்கள், கடந்த ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகள், மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் விவரங்கள் குறித்து அலுவலர்களுடன் கலந்துரை யாடினார்.


இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மு. மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.ஜி.வினய், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, துணை ஆணையர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, எச்.ஆர்.கௌஷிக், மண்டலக் குழுத் தலைவர் கூ.பி. ஜெயின் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%