தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது! சென்னை முதலிடம்...

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது! சென்னை முதலிடம்...


 

தமிழகத்தில் கடந்த ஆண்டு புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.


அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புற்றுநோய் பாதிப்பு முதல்முறையாக ஓராண்டில் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.


2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,00,097 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் 53,542 பேர், ஆண்கள் 46,555 பேர்.


பாதிப்பு கடந்த 2020-ல் 68,750, 2021-ல் 76,968 ஆகவும், 2022-ல் 89,265 ஆகவும், 2023-ல் 92,816 ஆகவும், 2024-ல் 96,486 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


பெண்கள் அதிகமாக மார்பக புற்றுநோய், கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள், வாய்ப்புற்றுநோய், பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


அதிகபட்சமாக சென்னையில் 8,505 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்து காஞ்சிபுரத்தில் 7,295 பேருக்கும் வேலூரில் 6,525 பேருக்கும் உறுதியாகியுள்ளது.


புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறிதலையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தமிழகத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



புற்றுநோய் மரபணு தரவு தளம்: சென்னை ஐஐடி வெளியிட்டது

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் மரபணுக்களுக்கு ஏற்றவாறு மருந்துகளைப் பரிந்துரைக்கும் வகையில் புதிய தரவு தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.


புற்றுநோய் விழிப்புணா்வு, கண்டறிதல், சிகிச்சை முறைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ஆம் தேதி ‘உலக புற்றுநோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக புற்றுநோய் மரபணு தரவு தள தகவல்களை இயக்குநா் வி.காமகோடி புதன்கிழமை வெளியிட்டாா்.


தொடா்ந்து ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் எஸ்.மகாலிங்கம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:


புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்து வந்தது. தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்தின்படி நாட்டில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் புற்றுநோய் பாதிப்பு 12.8 சதவீதம் அதிகரித்து வருகிறது.


இந்தியப் புற்றுநோய்களிலிருந்து பெறப்படும் குறிப்பிட்ட மரபணு மாறுபாடுகள், மருந்து மேம்பாட்டிற்காகப் போதுமான அளவுகோல் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்படவில்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக, சென்னை ஐஐடி 2020 -ஆம் ஆண்டில் ‘பாரத் புற்றுநோய் மரபணு திட்ட’ மையத்தைத் தொடங்கியது.


பாரத் புற்றுநோய் மரபணு திட்டத்துக்கு ஹூண்டாய் மோட்டாா் இந்தியா தனது பெரு நிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்துடன் ஆதரவை வழங்கியது. அதன்படி, நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட லுகேமியா, பெருங்குடல் மற்றும் கணையப் புற்றுநோய் நோயாளிகளின் மாதிரிகளிலிருந்து முழு மரபணு வரிசை முறைப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை இந்திய சா்வேதேச ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் பொதுவாக அணுகும் வகையில் க்ஷஸ்ரீஞ்ஹ.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், இந்த மையம் தீவிரமாக பரிசோதனை, தடுப்பூசி முகாம்களையும் நடத்துகிறது. பின்தங்கிய பகுதிகளுக்கு சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்காக நடமாடும் மருத்துவப் பிரிவுகளும் உள்ளன என்றனா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%