தமிழகத்தில் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்த உயர்நிலை குழு அமைத்தது மத்திய அரசு
புதுடெல்லி: தமிழகத்தில் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் செயல்பாட்டை ஆய்வு செய்து, அவற்றின் எண்ணிக்கை மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை பரிந்துரை செய்து வலுப்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
சமீபத்தில் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு விரிவான, கள அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வுகாண மேற்கொண்ட தலையீட்டை அடுத்து இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் துறை சம்பந்தப்பட்டவர்களுடன் சிவராஜ் சிங் சவுகான் விவாதித்தபோது, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் எதிர்கொள்ளும் செயல்பாடு சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் சந்தை பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டன. இந்த உள்ளீடுகள் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு உயர்நிலைக் குழுவை அமைக்கவும், பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவும் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
விரிவான மற்றும் கள அடிப்படையிலான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக இந்தக் குழுவில் நபார்டு வங்கி, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு, சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, சிறு விவசாயிகள், வேளாண் வணிக கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு, ஐசிஏஆர் – தேசிய வாழை ஆராய்ச்சி மையம், வேளாண் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் நிர்வாகம், மேலாண்மை நடைமுறைகள், வணிகச் செயல்பாடுகள், தொழில்நுட்ப ஆதரவு, தொடர்புகள், ஒருங்கிணைப்பு, மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல், சவால்கள், திறன் கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களை இந்தக் குழு ஆய்வு செய்யும்.
வாழை, மஞ்சள், தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பயிர் வகைகள் மற்றும் இயற்கை வேளாண் சாகுபடி முறைகள் பற்றி இந்தக் குழு சிறப்பு கவனம் செலுத்தும். கள நிலவரத்தை கணக்கில் கொண்டு பரிந்துரைகள் செய்யப்படுவதை உறுதி செய்ய இந்தக் குழு களப் பயணங்களை மேற்கொள்வதோடு, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், அவற்றின் உறுப்பினராக உள்ள விவசாயிகள், சந்தைப்பிரிவுகள் மற்றும் இதர பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தும்.
இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையமும், ஐதராபாதில் உள்ள வேளாண் அறிவியல் மையம் ஆகியவை இந்தக் குழுவிற்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.