திருவள்ளூர்: சென்சஸ் எடுப்பதாக கூறி செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது
புட்லூர் ஏவிஎம் நகர் பகுதியில் சியாமளா (55) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ராமு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமு வேலைக்கு சென்ற போது வீட்டில் தனியாக இருந்த சியாமளாவிடம் இளம்பெண் ஒருவர் சென்சஸ் எடுப்பதாக கூறி வந்துள்ளார்.
அந்த பெண்ணை சியாமளா வீட்டுக்குள் அழைத்து அவரிடம் பேசி கொண்டிருந்த போது திடீரென அந்த பெண் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சியாமளாவை தாக்கியுள்ளார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் சியாமளா உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, கதவை வெளிப் பக்கமாக பூட்டிவிட்டு கத்தி கூச் சலிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த பெண் புட்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த பவித்ரா என்பதும், கடன் பிரச்சினையை தீர்க்க இதுபோன்று செய்ததாகவும் தெரிந்தது. சியாமளர திருவள்ளுர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை தி.நகரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.23.50 லட்சம் பறிமுதல்
ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.23.50 லட்சத்தை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக, ஆந்திராவை சேர்ந்த 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டிபஜார் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காரை சோதனை செய்தபோது, உள்ளே கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
காரில் இருந்த ரூ.23.50 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, காரையும், பணத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த 6 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, நிதி நிறுவன உரிமையாளர் வெங்கடநாகா, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி தொழிலதிபர் பத்ம சுப்பையா, ஊழியர்கள் அஸ்வின் குமார், கணேஷ், கண்ணா மகேஷ் மற்றும் சந்தீப் வர்மா என்பது தெரியவந்தது.