news Breaking News
clock

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு உலகத் தரத்துக்கு உயர்ந்துள்ளது * அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு  உலகத் தரத்துக்கு உயர்ந்துள்ளது  * அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்


தூத்துக்குடி. ஆக.5-

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு உலக தரத்திற்கு உயர்ந்துள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார். 

 தூத்துக்குடியில் முதலீட்​டாளர்​கள் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 3600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.2530 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மேலும் மாநாட்டில் சுமார் 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.32554 கோடி முதலீட்டில் அமைக்கப்படக்கூடிய 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மகத்தான வளர்ச்சி

இதனை தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அளித்த பேட்டி-

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி உள்ளது. எங்கு சென்றாலும் கட்டமைப்பு, உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இருக்கின்றன. ஆகையால் படித்த இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

உலக திறன் வாய்ந்த உற்பத்தி இருப்பதால் உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். இந்தியா முழுவதும் பல நாடுகளில் தமிழ்நாடு அளவிற்கு இல்லை என்று முதலீட்டாளர்கள் சொல்லும் அளவிற்கு, தென் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சி பெற வேண்டும்.

உலகத்தரம்

தொழில் துறையில் வடதமிழ்நாடு எப்படி உயர்ந்து இருக்கிறதோ? அதை போன்று மேற்கு மண்டலத்திற்கும், டெல்டா மாவட்டத்திற்கும், தென் தமிழகத்திற்கும் மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை கொண்டு வர முதலமைச்சர் எடுத்து கூறியுள்ளார். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு உலக தரத்திற்கு உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 22 ஒப்பந்தங்களில் ரூ.32,282 கோடி முதலீடு செய்ய பெரு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. 48,689 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 

தென்தமிழகத்திற்கு மட்டும் 30,100 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 46,450 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை வரை வேலைவாய்ப்புகள் உருவாகும். 

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 1,261 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. 'நான் முதல்வன்' திட்டத்தில் 350 பேருக்கு பயிற்சி அளித்து அதில் 250 பேருக்கு வின்பாஸ்ட் நிறுவனத்தில் பயிற்சி வேலை வழங்கப்பட்டுள்ளது.

இலக்கு 

முதலீடுகள் ஒரு பகுதியில் வரும் போது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது என்பதே திமுக அரசின் இலக்கு. ஆட்டோமொபைல் தூத்துக்குடியில் ஒரு இடம் பிடித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடி மிகப் பெரிய வளர்ச்சியை அடையும். கப்பல் கட்டுமான துறையில் மிகப்பெரிய வளர்ச்சி வர இருக்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகும். விண்வெளி கட்டுமான தொழில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில் மிகப்பெரிய விண்வெளி பூங்கா வர இருக்கிறது.

எது தேவையோ? அதற்கேற்ப முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். உதிரி பாகங்களும் இங்கேயே அமைக்கும் வகையில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News