நக்சல் பயங்கரவாதம் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது’
Oct 17 2025
16

துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளின் கோபத்தை சந்திப்பார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் நக்சல் பயங்கரவாதத்தை அடியோடு அழிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் அமைப்பை சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் நக்சல் பயங்கரவாதம் அதன் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“நக்சல்களுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கியமான நாள். இன்று, சத்தீஸ்கரில் 170 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளனர். நேற்றைய தினம் அங்கு 27 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். அதேபோல் மராட்டிய மாநிலத்தில் 61 நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்துள்ளனர்.
மொத்தத்தில், கடந்த இரண்டு நாட்களில் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த 258 இடதுசாரி பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, வன்முறையை கைவிட வேண்டும் என அவர்கள் எடுத்த முடிவை நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைவிடாத முயற்சிகளால் நக்சல் பயங்கரவாதம் அதன் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது: சரணடைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள், மேலும் துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளின் கோபத்தை சந்திப்பார்கள்.
நக்சல் அமைப்பின் பாதையில் இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். மார்ச் 31, 2026-க்கு முன்பு நக்சல் பயங்கரவாதத்தை வேரோடு அகற்ற வேண்டும் என நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?