நடிகர் மம்முட்டி, பிருத்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை சோதனை
கொச்சி, செப். 23–
பூட்டான் வழியாக முறைகேடாக சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்த புகாரில் மலையாள நடிகர்கள் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான், பிருத்விராஜ் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ். பிருத்விராஜ் நடிப்பு தாண்டி படங்கள் தயாரித்தும், இயக்கியும் வருகிறார். பிறமொழிகளிலும் நடிக்கிறார். அதேப்போல் நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகின் முன்னணி நடிகராகவும். உள்ளார். அவரது மகனான நடிகர் துல்கரும் நடிப்பு தாண்டி படங்களும் தயாரிக்கிறார். பிறமொழிகளிலும் நடிக்கிறார். பொதுவாகவே மலையாள நடிகர்கள் சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், விதவிதமான வெளிநாட்டு உயர் ரக கார்களை பல நடிகர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் பூட்டான் வழியாக ஆடம்பர வாகனங்களை முறைகேடாக இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பெயரும் அடிபட்டது. இதை தடுக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் 'ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் சுங்க அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் மட்டும் 30 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இதில் மலையாள நடிகர்கள் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்தது. வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத வாகன இறக்குமதியில் இவர்கள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்படி இந்த ரெய்டை அதிகாரிகள் மேற்கொண்டனர். அவர்கள் வாங்கிய உயர் ரக வாகனங்கள் குறித்து சரிபார்ப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதேப்போல் தொழிலதிபர்கள் மற்றும் சில கார் ஷோரூம்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.
குறைந்த விலையில் ஏலம் விடப்பட்ட சொகுசு ரக வாகனங்களை முறையான வரி செலுத்தாமல் பூட்டான் வழியாக இந்தியாவிற்கு கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர வாகனங்கள் இமாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்காலிக முகவரிகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் நிறைய வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சோதனை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள் கார்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.