நவகிரகங்களை வழிபடும்போது ஏழு முறை இடமிருந்து வலமாகவும் இரண்டு முறை வலமிருந்து இடமாகவும் சிலர் சுற்றுகிறார்கள். இது சரியா?
இது நிச்சயம் சரியில்லை. இது முற்றிலும் தவறானது. நவக்கிரகங்களில் ராகு, கேது இருவரும் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார்கள் (தலைகீழாக சுற்றுகிறார்கள்) என்பதால் ஏழுமுறை இடமிருந்து வலமாகவும், 2 முறை வலமிருந்து இடமாகவும் அதாவது தலைகீழாக சுற்ற வேண்டும் என்று காரணத்தையும் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகிய கிரகங்கள் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் சேர்த்து எத்தனை கிரஹங்கள் வக்ரமோ அத்தனை சுற்றுகளை தலைகீழாக சுற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
முதலில் அறிவியல் ரீதியான ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
வக்ரம் என்றால் எந்த ஒரு கோளும் பின்நோக்கிச் செல்வதில்லை. சூரியனைச் சுற்றி அனைத்து கோள்களுமே தனித் தனியாக அவரவருக்கு உரிய நீள்வட்டப் பாதையில் நேராகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
அவ்வாறு நீள்வட்டப் பாதையில் பயணிக்கும்போது ஒரு சில நேரங்களில் அவற்றின் வேகம் குறைகிறது. அவ்வாறு வேகம் குறையும் நேரத்தில் நம் கண்களுக்கு அவை பின்நோக்கிச் செல்வது போல் தோன்றுகிறது.
உங்களுக்கு எளிதில் புரியும்படியாகச் சொல்லவேண்டும் என்றால் அருகருகே இரு இரயில் வண்டிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வண்டியின் வேகம் குறைந்தால், வேகமாகச் செல்லும் வண்டியில் பயணிப்போரின் கண்களுக்கு அருகில் உள்ள வண்டி பின்நோக்கிச் செல்வது போல் தோன்றுகிறது அல்லவா. அதுபோலத்தான் இதுவும்.
இவ்வாறு கிரஹங்கள் சுற்றுகின்றபோது அவற்றின் வேகம் குறைகின்ற காலத்தையே வக்ர கதி என்று குறிப்பிடுகிறார்கள். மாறாக நீங்கள் நினைப்பது போல எந்த ஒரு கிரகமும் பின்நோக்கிச் செல்வது இல்லை.
பூமியில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் நம் கண்களுக்கு வக்ர கதியில் உள்ள கிரஹங்கள் பின்நோக்கிச் செல்வது போல் தெரிகிறது. அவ்வளவுதான். எந்த ஒரு கோளும் பின்நோக்கி செல்லவே செல்லாது.
ராகு-கேதுக்களைப் பொறுத்த வரை அவைகள் உண்மையான கோள்கள் இல்லை. அவைகள் இரண்டும் வெட்டும் புள்ளிகள். இந்த வெட்டும் புள்ளிகள் ஒரே இடத்தில் நிலைகொண்டு இருப்பதால் பூமியில் முன்நோக்கி பயணிக்கும் நம் கண்களுக்கு அவைகள் பின்நோக்கிச் செல்வது போல் தெரிகிறது. அதற்காக ராகு&கேதுக்களை வணங்க நாமும் பின்நோக்கிச் சுற்றுவது என்பது முற்றிலும் மூடநம்பிக்கையே ஆகும்.
அதோடு மட்டுமல்லாது சுற்றி வந்து வணங்குவது என்பது நமது இயற்கையோடு கலந்த ஒரு நடைமுறை.
பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பதைப் படிக்கிறோம்.
அதே போல நாமும் இறைசக்திகளை சுற்றி வந்து வணங்குகிறோம், அதோடு நில்லாது இருந்த இடத்திலிருந்தே தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் வணங்குகிறோம்.
இது அனைத்தும் இடமிருந்து வலமாகவே அமைகிறது. ஏனெனில் இந்த பூமியும் இடமிருந்து வலமாகவே சூரியனைச் சுற்றுவதோடு தன்னைத்தானும் சுற்றிக் கொள்கிறது.
எவ்வாறு இந்த பூமியானது வலமிருந்து இடமாகச் சுற்றுவது இல்லையோ, அதே போல நாமும் வலமிருந்து இடமாக இறைசக்திகளைச் சுற்றக்கூடாது. அவ்வாறு சுற்றினால் அது இயற்கைக்கு மாறான ஒரு செயல். அதனால் உடலுக்கு நோய்தான் வருமே தவிர நன்மைகள் விளையாது.
நவக்கிரகங்கள் எண்ணிக்கையில் ஒன்பது என்பதற்காக ஒன்பது சுற்றுதான் சுற்றவேண்டும் என்ற கருத்தே தவறானது. ஏன் ஒன்பது சுற்றுகளுக்கு மேல் சுற்றினால் நவக்கிரகங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களா என்ன.?
நம்மால் எத்தனை சுற்று சுற்ற இயலுமோ அத்தனை முறை சுற்றினால் போதும். ஒரே ஒருமுறை சுற்றினாலும் சிரத்தையோடு சுற்ற வேண்டும்.
இந்த உண்மையைப் புரிந்துகொண்டு சுற்றுகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் இறைசக்திகளின் மேல் உங்களது கவனத்தை செலுத்தி இடமிருந்து வலமாக சுற்றி வந்து வணங்குங்கள். வளம் பெறுவீர்கள்.
சர்வம் சிவார்ப்பணம்..!

அனுப்புதல்:
ப. கோபிபச்சமுத்து,
பாரதியார் நகர்,
கிருஷ்ணகிரி _ 1