நியோ மேக்ஸில் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்க அக்.8 வரை இறுதி வாய்ப்பு: உயர் நீதிமன்றம்
Sep 21 2025
38

சென்னை:
நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8-ம் தேதி வரை இறுதி வாய்ப்பளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி தமிழகம் முழுவதும் முதலீட்டாளர்களைச் சேர்த்தது. பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாக நியோ மேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மதுரை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு விவரங்களை தாக்கல் செய்தார். மேலும், வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதாக வாதிட்டார்.
இதனையடுத்து, நீதிபதி இந்த வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிமையாக இருக்கும் எனவும், மேலும், நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 8-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
அக்டோபர் 8-ம் தேதிக்குள் புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத் தரப்படும் எனக் கூறிய நீதிபதி வழக்கை, செப்டம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?