பழங்குடியினர் மொழி, பண்பாட்டு மரபுகளை காக்க ‘தொல்குடி மின்னணு காப்பகம்’

பழங்குடியினர் மொழி, பண்பாட்டு மரபுகளை காக்க ‘தொல்குடி மின்னணு காப்பகம்’



பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க 'தொல்குடி மின்னணு காப்பகம்' ஒன்றை தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையின் 2024- 2025 நிதி நிலை அறிக்கையில், பழங்குடியினர் மொழி மற்றும் ஒலி வடிவங்களை எதிர்கால தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.2 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு பழங்குடியினர் மொழிகளை ஆவணப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை கண்டறிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 2024-ம் ஆண்டு செப்.27, 28 தேதிகளில் "தமிழக பழங் குடியினரின் கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல்" என்ற தலைப்பில் தேசிய தொல்குடி மாநாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.


இந்த மாநாட்டில் புகழ்பெற்ற தேசிய கல்வி நிலையங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் பணிபுரியும் மொழியியல் மற்றும் கலாச்சார வல்லுநர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, பழங்குடியினர் மொழி பாதுகாப்பு குறித்து பரிந்துரைகளை வழங்கினர்.


இந்த மாநாட்டின் கருப்பொருளாக முன்வைக்கப்பட்ட அம்சங்கள் வருமாறு: அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடி மொழிகள் மற்றும் பேச்சு மொழி மரபுகளை பாதுகாத்தல், அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடி மொழி சிறப்பு, கற்பித்தல் முறைமைகளை ஆராய்தல், அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடி மொழிகளை புதிய தொழில் நுட்பங்கள் மூலம் புத்துயிரூட்டுதல், அழிந்து வரும் பழங்குடி மொழிகளை ஆவணப் படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்து வதற்கான திட்டங்கள், பழங்குடியினர் மக்களின் பேச்சு மற்றும் மொழிப் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவைகளாகும்.


இம்மாநாட்டின் தொடர்ச்சியாக, பழங்குடியினரின் மொழி, கலாச்சாரம், பண் பாட்டை ஆவணப்படுத்தும் வகையில், பல்வேறு மொழியியல் மற்றும் கலாச்சார வல்லுநர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையால் அமைக்கப்பட்ட மதிப்பீட்டு குழு ஆராய்ந்து பரிந்துரைத்தது. இதன்படி முதற்கட்டமாக காணிக்காரர், நரிக் குறவர், இருளர், தோடர் மற்றும் குரும்பர் ஆகிய பழங்குடியின மொழி, கலாச்சாரம், பண்பாட்டினை ஆவணப்படுத்த ஏதுவாக அர சால் அனுமதி வழங்கி உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டது.


தரவுக்களை சேகரிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, சேகரிக்கப்பட்ட தரவு களை ஒருங்கிணைத்து மின்னணு காப்பக மாக மாற்ற சென்னை சமூகப் பணி கல்லூரியில் உள்ள சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் தொல்குடி மின்னணு காப்பகம், பழங்குடியினர் மொழிகளையும், கலாச்சாரங்களையும் பதிவு செய்து நீண்ட காலத்துக்கு பாதுகாப்பதற்கும் அவற்றை வருங்கால மக்களுக்கு பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.


இதன்படி தோடா சமூகத்தின் சடங்கு பாடல்கள், இருளர் சமூகத்தின் மருத்துவ மரபுகள், குறும்பா சமூகத்தின் கதை சொல் லும் ஓவியங்கள் மற்றும் காணிக்காரர் சமூகத்தின் சற்றுபாட்டு என்னும் மரபுப் பாடல்கள் போன்றவை இந்த மின்னணு காப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. இது தலைமுறை பரம்பரை கற்றல், மின்னணு கதை சொல்லல் மற்றும் பாடத்திட்ட மேம்பாடு ஆகியவைகளுக்கான தளமாகவும் செயல்படுகிறது.


இந்தத் தொல்குடி மின்னணு காப்பகம் (www.tholkudi.in), கடந்த ஆக.9 உலக பழங்குடியினர் தினத்தன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரால் பொதுப் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%