அன்று பிரதோஷம்.
கடைத்தெருவில் இருந்த சிவன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
மாலை மணி ஐந்து.பிரபல தொழிலதிபர் தீன தயாளன் காரிலிருந்து கோயில் வாசலில் இறங்கினார்.தொழிலதிபர் மட்டுமல்ல அவர், சிறந்த ஆன்மீகவாதியும் கூட. தினமும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் கோயிலுக்குச் சென்று விடுவார் .நெற்றியில் திருநீறு எப்போதுமே இடம் பிடித்திருக்கும். சரியான சிவப்பழம்.கோயில் விசேஷங்களுக்கான நன்கொடை லிஸ்ட்டில் பல வருடங்களாகவே அவர் பெயர்தான் முதலில் இருக்கும்.
கை கூப்பிவாறு கோயிலில் நுழைந்தார் தீனதயாளன்.. எதிர்ப்பட்ட அறிமுகமான அனைவரும் அவருக்கு வணக்கம் சொல்லி மரியாதைக்காக ஓரமாக ஒதுங்கி நின்றனர். " இருக்கட்டும்.. பூஜைக்கான நேரம் நெருங்கிடுச்சு .வாங்க எல்லாரும் நந்தி கிட்டே போவோம்."என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.
நந்தியின் முன் கண்மூடியபடி நின்றார்.பூஜை முடிந்து கண் திறந்து பார்த்த போதுதான் எதிரில் அவரது ஆபீஸ் பியூன் குமார் நின்றிருந்தது தெரிந்தது 'என்னது நம் எதிரிலேயே நிற்கிறான் நம்மைக் கண்டுகொள்ளவில்லை பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்கிறானே . மரியாதை தெரியாதவன் ' என்று மனதுக்குள்ளேயே கோபப்பட்டு கொண்டார் தீனதயாளன் . கோபத்தில் கண்கள் ரத்தச் சிகப்பாக மாறின.
அடுத்த நாள். தீனதயாளன் ஆபீஸில் தனது அறையில் அமர்ந்திருந்தவர் குமாரை அழைத்து "என்ன நேத்து கோயிலுக்கு வந்து இருந்தே போல இருக்கு." என்று கோபமானகுரலில்
ஆரம்பித்தார். அவரது கோபத்தை அறியாத குமார் "ஆமாங்கய்யா ..உங்களைக் கூட பார்த்தேன். உங்களுக்கு வணக்கம்
சொல்லலாம்னு நெனச்சப்போ தான் 'கோயில்ல எவ்வளவு பெரியவங்க வந்தாலும் அவங்களுக்கு வணக்கம் சொல்றது கூடாது.
அங்கே கடவுள் ஒருவனே பெரியவன்'னு ஒரு ஆன்மிக புத்தகத்தில் படிச்சது எனக்கு ஞாபகம் வந்தது.
அதனாலதான் அய்யா உங்களுக்கு வணக்கம் வைக்கல. தப்பா நினைச்சுக்காதீங்க "என்றான். கன்னத்தில் அறைந்தாற் போல் இருந்தது தீனதயாளனுக்கு.
உண்மையான ஆன்மிகவாதி நானா இல்லை அவனா என்று விக்கித்துப் போனார் அவர்.

மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?