புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு



4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

புதுடெல்லி,


மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை (New Labour Code) மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அல்லது சுதந்திரம் அடைந்த பிறகு சிறிது காலத்தில் இயற்றப்பட்டவையாகும். இது தற்போதைய சூழலில் சிக்கல் நிறைந்தாகவும், தனித்தனி பிரிவாகவும் உள்ளன. இதனால் இது தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.


தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 உள்ளிட்டவைதான் இந்த புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளாகும். இந்த சட்டங்கள் கடந்த 2020-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


”இன்று எனது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு தொழிலாளர்கள் நலனுக்காக நான்கு புதிய சட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. இது நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். அதே வேளையில், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும்.


இந்த சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நமது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இது வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்.


இந்த விதிகள் சமூகப் பாதுகாப்பு, சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் நமது உழைக்கும் சகோதர சகோதரிகளுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்யும். அவை சிறந்த மற்றும் அதிக லாபகரமான வாய்ப்புகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளம் சக ஊழியர்கள் அவற்றால் குறிப்பாக பயனடைவார்கள்.”


இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%