புதுச்சேரியில் டிசம்பர் 5ந் தேதி விஜய் ரோடு ஷோ: அனுமதி கேட்டு மனு
Nov 27 2025
31
புதுச்சேரியில் ரோடு ஷோ சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமதி கேட்டு டி.ஜி.பி. யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தினார். இதில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்த நிலையில் கரூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார்.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மக்களை நேரில் சந்தித்து விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரத்தில் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம் அரங்க நிகழ்ச்சியாகவே நடந்தது. இதில் 2 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் டிசம்பர் 5-ந் தேதி புதுச்சேரியில் சாலை வலமாக (ரோடு ஷோ) சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். விஜய்யின் ‘ரோடு ஷோ’விற்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் புதுச்சேரி டி.ஜி.பி. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பான அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்கள் கழகத் தலைவர் விஜய் டிசம்பர் 5–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாலை மார்க்கமாக காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம். தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக வருகை பரிந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது ‘உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் ஒலிப் பெருக்கியின் மூலமாக உரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி எங்கள் கழகத் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ‘ரோடு ஷோ’வுக்கு தடை இருந்தாலும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இதற்கு அனுமதி கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?