மக்கள் மனதில் பாகுபாடுகளை போக்காமல் தெருக்கள் பெயரை மாற்றுவதால் பலனில்லை: மதுரை ஐகோர்ட்டு
மதுரை,
மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆளுங்கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவ்வாறு தெருக்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இருப்பிட சான்றுகளில் முகவரியை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே குடியிருப்பு பகுதி, சாலைகள், தெருக்களின் சாதி பெயர்களை நீக்குவதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நடந்தபோது, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை பழைய பெயர்களை நீக்குவது, புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மக்களின் மனதில் பல்வேறு பாகுபாடு உள்ளது.
அவற்றையெல்லாம் போக்காமல் தெருக்களின் பெயரை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை என்றனர். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, முதல் கட்டமாகத்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மக்களின் மனதிலும் மாற்றம் வரும் என்றார். இதையடுத்து இந்த வழக்கில் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?