மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தகராறு: போதை இளைஞரை ஆர்பிஎஃப் காவலர் தாக்கிய வீடியோ வைரல்
சென்னை: மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் டிடிஇ-யிடம் தகராறில் ஈடுபட்ட போதை இளைஞரை ஆர்பிஎஃப் காவலர் கழுத்தில் கால் வைத்து தாக்கியது தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு கடந்த 11-ம் தேதி ஒரு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் மது போதையில் ஓர் இளைஞர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அவரை டிக்கெட் பரிசோதகர் சோதித்த போது, அந்த நபர் டிக்கெட் இன்றி பயணிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை டிக்கெட் பரிசோதகர் கீழே இறக்கி, அபராதம் விதிக்க முயன்றார்.
அதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து ஆர்பிஎஃப் போலீஸாரிடம் டிக்கெட் பரிசோதகர் தெரிவித்தார்.
அங்கு வந்த ஆர்பிஎஃப் காவலர் ஒருவர், இளைஞரை பிடிக்க முயன்றபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர் தப்ப முயன்றபோது, திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடையில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞரை தரையில் தள்ளி கழுத்தில் கால் வைத்து தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இச்சம்பவம் குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் கேட்டபோது, மதுபோதையில் பயணித்த இளைஞர், கொருக்குப்பேட்டைச் சேர்ந்த தர்மன் (22) என்பதும், இவர் மீது தண்டையார்பேட்டை ஆர்பிஎஃப் போலீஸார் வழக்குப்பதிந்து, அபராதம் விதித்து அனுப்பியதும் தெரியவந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?