இன்று ராஜா பிசினஸில் உச்சம் தொட்டான். ஆரம்ப காலத்தில் சைக்கிளில் அலைந்தவன், இப்போது செல்வத்தில் புரள்கிறான். பணம் வந்ததும் பார்வை மாறியது. மனம் கடினமானது.
“என் வெற்றிக்குக் காரணம் என் முயற்சியே!” என்று சொல்லிக் கொண்டு, தன்னை வளர்த்த அப்பா அம்மாவை சுமையாகக் கருதத் தொடங்கினான்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கே கத்தல், அவமதிப்பு, திட்டுதல்.
அக்கம் பக்கத்தார்களோ..., உறவினர்களோ... யாரேனும்
“பெற்றோர்களை மதி ராஜா"
என்று சொன்னால், அவர்களையும் வசை பாடுவான்.
“யாருக்கும் நான் கடமைப்பட்டவன் இல்லை!” என்பதே அவன் வாழ்க்கைத் தத்துவமாகிப் போனது.
கவனிக்க ஆளில்லாமல், மருத்துவமனை வாசல்களில் அலைந்து, மனமும் உடலும் சோர்ந்து அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்தே போனார்கள்.
ராஜாவுக்கு அது ஒரு தகவலாய் மட்டுமே இருந்தது.
ஆனால் காலம் தன் கணக்கை மாற்றி எழுத ஆரம்பித்தது.
ஒரு தவறான முடிவால்
பிசினஸ் சரிவடைந்தது.
அடுத்தடுத்து வந்த நஷ்டங்களால்
நண்பர்கள் காணாமல் போனார்கள்.
வங்கிக் கதவுகள் மூடப்பட்டன.
முத்தாய்ப்பாய் ராஜா தெருவில் நின்றான்.
அதே உலகம்… அதே மனிதர்கள்…
ஆனால் அவனிடம் எதுவும் இல்லை.
வேலை தேடி அலைந்தான்.
எங்கும் கிடைக்கவில்லை.
கடைசியில், ஒரு முதியோர் இல்லத்தில் "மூத்தோர்களைப் பார்த்துக் கொள்ளும் வேலை”
கிடைத்தது.
முதல் நாளே, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த முதியவர் அவனைப் பார்த்து சிரித்தார். அந்தச் சிரிப்பு,
அப்பாவின் முகத்தை நினைவூட்டியது.
இன்னொரு அறையில், ஒரு பாட்டி
“மகனே” என்றழைத்தார்.
அம்மாவின் குரல் அவன் காதில் ஒலித்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு
ராஜா தனியாக அழுதான்.
“என் பெற்றோரைக் கவனிக்காத குற்றத்திற்கு இத்தனை மூத்தோர்களைக் கவனிக்கும் பொறுப்பா?” என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டான்.
அடுத்த நாள் முதல், அவன் கைகள் மென்மையாயின. குரல் தாழ்ந்தது.
பார்வையில் பாசம் வந்தது.
பெற்றோர்களுக்கு செய்யாத சேவையை, இப்போது பெற்றோர் வயதுள்ளவர்களுக்குச் செய்தான்.
சில பாவங்களுக்கு தண்டனை இல்லை…பொறுப்பு மட்டுமே.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?