ரயிலில் ஆர்ஏசி பயணிகளுக்கு பாதி கட்டணம் மட்டுமே..! நாடாளுமன்றக் குழு பரிந்துரை!
ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஆர்ஏசி அடிப்படையில் பகுதியளவு படுக்கை மட்டுமே ஒதுக்கப்படும் பட்சத்தில், பாதி தொகையைத் திருப்பி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ரயில்வே துறை சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை புதன்கிழமை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், “ரயில்களின் பயணச்சீட்டு முன்பதிவு விவரங்கள் தயாரிக்கப்பட்ட பிறகும், முழுப் படுக்கை ஒதுக்கப்படாமல் பகுதியளவு மட்டும் ஒதுக்கப்படும் ஆர்ஏசி (Reservation against Cancellation - ரத்து செய்யப்படுவதற்கு எதிரான முன்பதிவு) பயணிகளுக்கு முழுத் தொகையை வசூலிப்பது நியாயமற்றது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆர்ஏசி பயணிகளுக்கு பாதி தொகையைத் திருப்பி செலுத்தும் விதிமுறைகளை ரயில்வே அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய நடைமுறையின் படி, ஆர்ஏசி பிரிவின் கீழ் பயணச்சீட்டை முழு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யும் பயணி, இறுதி பயணச்சீட்டு விவரங்கள் தயாரிக்கப்பட்டும் ஆர்ஏசி பிரிவில் இருந்தால், மற்றொரு ஆர்ஏசி பயணியுடன் ஒரு படுக்கையை பகிர்ந்து கொள்வார். ஒரு படுக்கைக்கு இரண்டு பயணிகளிடமும் முழுத் தொகை வசூலிக்கும் நடைமுறை உள்ளது.
இத்தகைய பயணிகளுக்கு பகுதி கட்டணத்தைத் திரும்பச் செலுத்துமாறும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குத் தெரிவிக்குமாறும் அக்குழு ரயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அகலப் பாதையில் அதிவேக ரயில்களுக்கான குறைந்தபட்ச வேகமான மணிக்கு 55 கி.மீ. என்ற அளவுகோல்களை மறுஆய்வு செய்யவும் ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?