ரயில் பயணம் செய்யும் மக்களுக்கு புது ரூல்ஸ்.. தட்கல் டிக்கெட் முன்பதிவில் பெரிய மாற்றம்!

ரயில் பயணம் செய்யும் மக்களுக்கு புது ரூல்ஸ்.. தட்கல் டிக்கெட் முன்பதிவில் பெரிய மாற்றம்!




ரயில் பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிமேல், ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் வாங்கும்போது பயணிகளின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை சரியாக சொன்னால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். இந்த புதிய விதிமுறை தட்கல் டிக்கெட் மோசடிகள், போலி முன்பதிவுகள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த OTP அடிப்படையிலான முறை பயணிகளின் டிக்கெட் முன்பதிவை மேலும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும், பொது முன்பதிவின் முதல் நாள் முன்பதிவுக்கும் OTP அடிப்படையிலான முறைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன் வெற்றியின் அடிப்படையில் இந்த முறை இப்போது கவுண்டர் முன்பதிவுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 17 முதல் சில ரயில்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் கவுண்டர் முன்பதிவு திட்டம் தொடங்கப்பட்டது.


அதன் வெற்றிக்குப் பிறகு தற்போது 52 ரயில்களுக்கு இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில்களுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிமுறைப்படி, பயணிகள் ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, முன்பதிவு படிவத்தில் தங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதும் பயணிகளின் மொபைல் நம்பருக்கு ஒரு OTP எண் அனுப்பப்படும். அந்த OTP எண்ணை கவுண்டரில் உள்ள ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். அந்த OTP நம்பர் சரியாக இருந்தால் மட்டுமே டிக்கெட் உறுதி செய்யப்படும்.


 இந்திய ரயில்வேயின் இந்த நடவடிக்கை தட்கல் டிக்கெட்டுகளின் இருப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இடைத்தரகர்கள் டிக்கெட்டுகளை முடக்குவதையும் தடுக்கும். இதனால், உண்மையான பயணிகள் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட்டுகளைப் பெற முடியும். இந்த புதிய விதிமுறை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் பல அப்டேட்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.


 அதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் அனைத்து பொது முன்பதிவுகளின் முதல் நாள் முன்பதிவுக்கும் OTP அடிப்படையிலான ஆன்லைன் அமைப்பு செயல்படுத்தப்பட்டது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தது. இப்போது, இந்த முறையை கவுண்டர் முன்பதிவுக்கும் இந்திய ரயில்வே விரிவுபடுத்தியுள்ளது.


ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு. அதேபோல, வேகமாகவும் சௌகரியமாகவும் பயணிக்கலாம். இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். எனவே பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக நிறைய வசதிகளையும் விதிமுறைகளையும் இந்திய ரயில்வே கொண்டுவருகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%