ரெயின்ட்ராப்ஸ் 'கிராமிய கலை விழா 2026': பாரம்பரிய கிராமிய கலை சாதனையாளருக்கு விருது
சென்னை, ஜன.
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு சார்பில், வேலம்மாள் நெக்சஸ் மற்றும் விஜிபி ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட் ஆகியோருடன் இணைந்து, ரெயின்ட்ராப்ஸ் கிராமிய கலை விழா நிகழ்ச்சி, விஜிபி ஹெரிடேஜ் கோல்டன் பீச் ரிசார்ட்சில் உள்ள வள்ளுவர் கார்டன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கலைவிழாவில், கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்கள் இடம் பெற்றன. தமிழ்நாட்டின் கிராமிய பண்பாட்டின் உயிரோட்டத்தையும் செழுமையையும் பிரதிபலிக்கும் இந்நிகழ்ச்சிகளுடன், சமூகப் பொங்கல் கொண்டாட்டம் இணைந்து, ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் பண்பாட்டு பெருமையை வெளிப்படுத்தியது.
இவ்விழா, பாரம்பரிய கிராமிய கலைகள், சமூக உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வகையில் அமைந்தது. இவ்விழா, இந்தியாவின் செழுமையான கிராமிய பண்பாட்டை கௌரவிப்பதோடு, கலைஞர்கள், மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒரே மேடையில் இணைக்கும் சிறந்த தளமாக விளங்கியது.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக, “மண்ணின் குரல் விருதுகள்” வழங்கப்பட்டன. கிராமிய கலை, மக்கள் பண்பாடு மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை பாதுகாத்து, வளர்த்து, அவற்றின் உண்மையான குரலாக திகழ்ந்தவர்களை கௌரவிக்கும் நோக்கில், ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு இந்த விருதுகளை நிறுவியுள்ளது.
மண்ணின் குரல் விருதுகள் 2026 வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக, மூத்த நாட்டுப்புறக் கலைஞர்கள் டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர். அனிதா குப்புசாமி ஆகியோருக்கு, கிராமிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளுக்கான அவர்களின் அபாரமான பங்களிப்பையும், பாரம்பரிய கலைவடிவங்களுடன் அவர்களின் நீண்டகால பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும், வில்லுப்பாட்டு கலையின் முன்னோடி பாரதி திருமகன், பாரம்பரிய இசைக் கருவிகளை மீட்டெடுக்கும் 'சவுண்ட்' மணி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன், இயற்கை விவசாயி பிரபாகரன் ஆகியோர், தத்தமது துறைகளில் செய்த சிறப்பான பங்களிப்புகளுக்காக “மண்ணின் குரல்” விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், ஆனந்தம், சேவாலயா, ஜெயம் சிறப்பு பள்ளி மற்றும் ஸ்ரீ சாய் இல்லம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் முதியோர்கள் பங்கேற்றது, பண்பாட்டு நிகழ்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் உறுதியை மேலும் வலுப்படுத்தியது. இந்நிகழ்வில் இசை அமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ்அமைப்பின் நல்லிணக்க தூதுவருமான ஏ.ஆர். ரைஹானா, விஜிபி குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம், விஜிபி குழுமத்தின் முதன்மை இயக்குனர் விஜிபி ராஜாதாஸ், நடிகை நீலிமா, இந்திரஜா ரோபோசங்கர், மண்வாசனை மேனகா, மவுண்ட் ரோடு தர்காவின் பரம்பரை அறங்காவலர் சையத் மன்சூருதின், தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சில் உறுப்பினர் வேல்முருகன், வழக்கறிஞர் கிரிஜா வேல்முருகன், ஆனந்தம் பாகீரதி ராமமூர்த்தி, அம்மா சமையல் மீனாட்சி, விளக்கு கடை ராஜலக்ஷ்மி சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.