வங்கதேசத்தில் கலவரங்களை ஏற்படுத்த முந்தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது: ஷேக் ஹசீனா மகன் குற்றச்சாட்டு
வர்ஜீனியா: வங்கதேசத்தில் கலவரங்களை ஏற்படுத்த ஜோ பைடன் தலைமையிலான முந்தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங்களை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். கலவரத்தை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்தது. பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சியில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவிடம் யூனுஸ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் கூறியதாவது: வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த ஜோ பைடன் தலைமையிலான முந்தைய அமெரிக்க அரசு மில்லியன் கணக்கில் டாலர்களை செலவிட்டுள்ளது. இதை இப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் ட்ரம்ப் ஆட்சியில் வங்கதேசம் தொடர்பான அமெரிக்க அரசின் அணுகுமுறை மாறிவிட்டது. வங்கதேசத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சி குறித்து அதிபர் ட்ரம்ப் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட பொதுத் தேர்தலுக்கு பிறகு, ஜோ பைடன் அரசு எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தது.
இந்தியா எப்போதும் நல்ல நண்பராக இருந்து வருகிறது. என் தாயின் உயிரை இந்தியா காப்பாற்றியுள்ளது. அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் தீவிரவாதிகள் அவரை கொன்றிருப்பார்கள். என் தாயின் உயிரை காப்பாற்றியதற்காக பிரதமர் மோடி அரசுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சட்டவிரோத அரசு வங்கதேசத்தில் உள்ளது. எனது தாய்க்கு மரண தண்டனை விதித்தபோது நீதிமன்ற நடைமுறைகளை அந்த அரசு பின்பற்றவில்லை. விசாரணையை விரைவுபடுத்த சட்டங்களை திருத்தினர். வழக்கறிஞர்கள் வைத்துக்கொள்ள எனது தாயார் அனுமதிக்கப்படவில்லை.
விசாரணைக்கு முன் 17 நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அனுபவம் இல்லாத அரசியல் தொடர்புடையவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.