news Breaking News
clock

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 13.08.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 13.08.25


  நலம் தரும் மருத்துவம் பகுதியில் சுக்கின் மருத்துவ குணங்கள் பற்றி படித்தேன். 'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியருக்கு மிஞ்சிய சாமியும் இல்லை' என்ற பழமொழி சுக்கின் மேன்மையை உணர்த்துகிறது என்பதை அறிந்திருந்தேன். ஆனாலும் சுக்கின் முழு மருத்துவப் பயன்களையும் விளக்கி, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் சொல்லியிருந்த விதம் பயன்படுத்த உதவும் விதத்தில் இருந்தது.


  ஜனனி அந்தோணி ராஜின் 'நியாயம் எங்கே?' என்ற சிறுகதை சுந்தர் என்ற மனிதரின் நியாய உணர்வை சிறப்பாக படம்பிடித்துக்காட்டியது. சுந்தர் கவலைப்படுவது பணத்துக்காக அல்ல, நியாயம் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகதான் என்பதை உணர்ந்ததும் அவன் மனைவி கல்யாணி மட்டுமல்ல, நானும் பெருமைப்பட்டேன்.


  முகில் தினகரனின் 'ஆசிரியரும் மாணவனும்' என்ற சிறுகதை, சுதந்திர தின சிறப்புக்கதையாக அமைந்திருந்தது. தமிழாசிரியர் முருகனிடம் படித்து, சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியான தேவராஜ் கூட எந்த அளவில் உயர்ந்த மனிதனாக இருக்கிறான் என்பதை நினைக்கும்போது மனம் நெகிழ்ந்துப்போனேன்.


  கே.பானுமதி நாச்சியாரின் 'ஊர்மிளை' படிக்கும்போது ராமாயணக் காலத்திற்கே சென்றதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. உரையாடல்களும் சம்பவங்களும் கண்முன் நடப்பதை போல் இருக்கிறது.


  பூலோகம்தான் வைகுண்டம் என்று முடிவு செய்து, ராமருடன் வைகுண்டம் போகாமல், இங்கேயே ராம நாமத்தை சொல்லிக்கொண்டே இருப்பேன் என்று தங்கிவிட்ட அனுமனின் ராமபக்தி அளவுகடந்த அற்புதமாகும். படிக்கும்போதே பக்தி பரவசம் ஏற்படுகிறது.


  'வானவில்' என்ற கவிதையில் கவிஞர் தி.வள்ளி அப்படியே வானவில்லின் வியப்பை தரும் அழகை கொண்டுவந்திருந்தார். படிக்கும்போதே லேசான சாரல் மழையில் வானவில்லை பார்ப்பதைப் போன்று இருந்தது.


  பல்சுவை களஞ்சியத்தில் சேப்பங்கிழங்கின் மருத்துவ பயனை ஏ.எஸ். கோவிந்தராஜன் எழுதியிருந்ததை படித்தேன். சேப்பங்கிழங்கிற்கு பற்களையும் எலும்புகளையும் வலுப்படுத்தும் சக்தி இருக்கிறதை அறிந்தேன். அதனால் அவ்வப்போது உணவில் சேப்பங்கிழங்கையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்!


  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News