எப்போதும் மேலோட்டமாகவே சினிமா செய்திகளை
பார்க்கும் நான், இன்று
அந்தப் பக்கங்களில் கவனம் செலுத்தினேன்.
அடடா... தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் கலை ரசனைக்கு ராயல் சல்யூட்!
கனகச்சிதமான தொகுப்பு. கலை என்று ஒன்று இல்லாவிட்டால் மனிதகுலம் என்றோ காணாமல் போயிருக்கும் என்று அறிஞர் ஒருவர் கூறிய கருத்து தான் சிந்தையில் வந்து சந்தோஷம் அளிக்கிறது.
உண்மை தானே...
கலை தானே மனித இதயங்களை ஈரப்படுத்தி மென்மை ஆக்குகிறது.
இல்லையேல் வறண்ட பாலையாகி விடுமே மனித மனங்கள்!
தொடக்கத்தில் தமிழ் நாடு இ பேப்பரில் வரும் சினிமா செய்திகள் மீது எனக்கிருந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
முத்து நகராம் தூத்துக்குடியில் முதல்வர் திறந்து வைத்த மின்சார கார் தொழிற்சாலை பற்றிய செய்திகள் மிகவும் சிறப்பு.
ஸ்டெர்லைட் ஆலை
இழப்பிற்கு வியட்நாம் வின் பாஸ்ட் சரியான ஈடு என்று நம்புவோம்.
அரசியல் தலைவர்கள் மாற்றி மாற்றி தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பதை
பார்க்கும் போது, தேர்தல் யானை வரும் பின்னே... சலுகை ஓசை வரும் முன்னே என்று பாடத் தோன்றுகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்
ஷிபு சோரனின் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி!
ஆத்ம சாந்திக்கு அடியேனும் இறைவனை வேண்டிக் கொண்டேன்.
341 வது திருக் குறளுக்கு அற்புதமான சிறப்பு உண்டு.
யாதனின் யாதனின்
நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ அந்தந்தப் பொருளால்
அவன் துன்பம் அடைவதில்லை.
இந்தக் குறளின் பொருளுக்கு தகுந்தாற் போல் வள்ளுவனார் வார்த்தைகளை மிகப் பொருத்தமாக கையாண்டிருப்பது
ஆச்சரியம் ஆச்சரியம்!
இந்தக் குறளை உச்சரிக்கும் போது
உதடுகள் இரண்டும் எந்த இடத்திலும் ஒட்டாது என்பதை கவனித்தால் வள்ளுவ
மேன்மை மேலும் வலுப்பெறும்.
1330 திருக்குறளில், 24 குறட்பாக்கள் இப்படி உதடுகள் ஒட்டாதவை. இதை இதழகல் குறள்கள் என்றும் அர்த்த கனத்தில் கூறுவர்.
வான் புகழ் வள்ளுவம் என்று சும்மாவா சொல்லிச் சென்றனர்
நம் முன்னோர்கள்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் நுட்பமான செய்திகள்... மிக்க நன்றி சார்!
கலப்பாக்கம் ரமேஷின்
பாவமும் சாபமும் பழனியின்
தசாவதாரம் சிறுகதைகளில் ஒரு வித டச் இருந்தன.
பாராட்டுகள்!
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் தேசத்தை தாண்டி எல்லை விரிகிறதே...
சபாஷ் சபாஷ்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
கவிதைகள், வாசகர் கடிதங்கள் மற்றும் மற்றும் எல்லாமும்
இதயம் நிறைக்கின்றன ...
எத்திசையும் புகழ் மணந்து ஜெயக்கொடி நாட்டிட தமிழ் நாடு இ பேப்பருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
பி.வெச்கடாசலபதி
தென்காசி