விவசாயிகளை ஏமாற்றும் வேளாண் பட்ஜெட்
தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்பு கூட
நிறைவேற்றவில்லை: தமிழகம் போராட்ட களமாக மாறியுள்ளது
எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை, பிப். –
தி.மு.க. அரசு 2021 தேர்தலின் போது கொடுத்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்குகூட நிறைவேற்றவில்லை. அதனால் தமிழகம் போராட்ட களமாக மாறியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்சபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் அது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த அரசு மக்களுக்கு எந்த அளவுக்கு காது குத்தி உள்ளது என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக எங்களது ‘காது குத்தும் விழா’ அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 2021ம் ஆண்டு தேர்தலின் போது தி.மு.க. 525 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. இதுவரை நான்கில் ஒரு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. முக்கியமாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதித் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்லி அதற்கு மாறாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களையம் இந்த அரசு ஏமாற்றியுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் உள்பட பல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்த வாக்குறதிகளை நிறைவேற்றவில்லை என்று எல்லோருமே போராட்டத்தில் ஈடுபட்டு இப்போது தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ளது.
சொந்த வருவாய் குறைவு
கடந்த 5 ஆண்டுகளை போல இந்த இடைக்கால பட்ஜெட்டும் வார்த்தை ஜாலம் நிறைந்த ‘மேனா மினிக்கி’ உரையாகத் தான் இருக்கிறதே தவிர உருப்படியாக எதுவும் இல்லை. 2025–26ன் வருவாய் வரவு மாநிலத்தின் சொந்த வருவாய் 2.58 லட்சம் என்று எதிர்பார்த்த நிலையில் திருத்திய மதிப்பீட்டின் படி 2.32 லட்சம் கோடியாக குறைந்து சுமார் 26 ஆயிரம் கோடி வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் நிதி அமைச்சர் மாநிலத்தின் சொந்த வருவாய் குறைந்தது பற்றி எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை.
வரவு செலவு 2025–26ல் ரூ. 66,753 கோடி செலவிடப்படும் என்று கணித்த நிலையில், திருத்திய மதிப்பீட்டில் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சுமார் 15 ஆயிரம் கோடி குறைந்ததற்கு நிதி அமைச்சர் எந்த இடத்திலும் விளக்கவில்லை. நிதிபற்றாக்குறை 24–25ல் 96 ஆயிரம் கோடி என்று கணித்த நிலையில் அந்த கணக்கின்படி ரூ. 1 லட்சத்து 1 ஆயிரம் கோடியாக அதாவது 5 ஆயிரம் கோடி அதிகரித்தள்ளது. 25–26ல் நிதி பற்றாக்குறை 1 லட்சம் 8 ஆயிரம் கோடியாக கணிக்கப்பட்ட நிலையில் திருத்திய மதிப்பின் படி 1 லட்சத்து 24 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது நிதி பற்றாக்குறை சுமார் 16 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. 26–27ல் இடைக்கால பட்ஜெட்டில் நிதிபற்றக்குறை 1 லட்சத்து 22 லட்சம் கோடியாக குறிப்பிட்ட நிலையில் கண்டிப்பாக இது உயரும். இவ்வாறு நிதிபற்றாகுறை உயர்ந்து கொண்டே சென்றால் மக்கள் மீது வரி சுமை மற்றும் கடன் வாங்கும் அளவு அதிகரிக்கும். மாநில வளர்ச்சிக்கு இது உகந்தது அல்ல.
பொம்மை முதலமைச்சர்
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் ரகுராம ராஜன் தலைமையில் நிதி மேலாண்மை குழு அமைத்து மாநில நிதி நிலை சீர்செய்யப்படும் என்று சொன்னார்கள். நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன்பின்தான் அதிக கடன் வாங்கி உள்ளனர். மக்கள் மீது வரிசுமை அதிகரித்துள்ளதை தவிர வேறு சாதனைகள் எதுவும் இல்லை. அதனால் தான் இன்றைக்கு ஸ்டாலின் நாம் குறிப்பிடுவது போல் பொம்மை முதலமைச்சர்.
சுமார் 5 மணி நேரம் இரண்டு அமைச்சர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆனால் உருப்படியாக நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை. குறிப்பாக இந்த அரசு 5 ஆண்டுகளில் என்ன செய்தார்களோ அதை வரிசைப்படுத்தி வார்த்தைகளை அழுகுபடுத்தி சாதனை என்று படித்தார்களே தவிர வேறு எதுவும் இல்லை. வேளாண் பட்ஜெட் என்பது இன்றைக்கு விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்.
அத்தனையும் பொய்
மொத்தத்தில் விடியா தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை அத்தி பழம் வெளியே அழகாக இருக்கும். உள்ளே சொத்தையாக இருக்கும் என்பது போல் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது.
தி.மு.க. அரசு 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறியுள்ளனர். அத்தனையும் பொய். ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்றம் கூடும் என்றார்கள். ஆனால் மொத்தத்தில் 5 ஆண்டுகளில் 140 நாட்கள் தான் நடந்துள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.