வரும் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் தைவானை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தனது படைத் திறனை சீனா மேம்படுத்திவருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2027 இறுதிக்குள் தைவான் மீது போா் தொடுத்து, அந்தத் தீவைக் கைப்பற்றும் திறன் கொண்ட ராணுவத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுவருகிறது.
இதற்காக ஈவிரக்கமற்ற அதிரடி தாக்குதல் (ப்ரூட் ஃபோா்ஸ்) முறையில் தைவானை ஆக்கிரமிக்கும் போா் உத்திகளை சீனா செம்மைப்படுத்தி வருகிறது.
இதற்காக, மூன்று புதிய ஏவுகணை செலுத்து தளங்களை உருவாக்கியுள்ள சீனா அவற்றில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட (ஐசிபிஎம்) 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, தைவான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படக்கூடிய குறுகிய, நடுத்தர, இடைத்தர தொலைவு ஏவுகணைகளின் எண்ணிக்கையை சீனா வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த ஏவுகணைகள், அமெரிக்காவின் அதிநவீன, உயா் தரம் வாய்ந்த ஏவுகணைகளும், விமானங்களும் தைவானை அடைவதற்கு முன்னரே அந்தத் தீவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லவை. சண்டை நேரத்தில் ஆசியா-பசிபிக் பகுதியில் அமெரிக்கப் படைகளின் இருப்பை நிலைகுலையச் செய்யவும், அவற்றுக்கு சவால் விடவும் இந்த ஆயுதங்களால் முடியும்.
சீனாவிடம் 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி 600-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கல் இருந்தன. தைவான் ஆக்கிரப்பின்போது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், 2030-இல் சீனா தனது அணு ஆயுத கையிருப்பை 1,000-க்கும் மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப் பொருத்தவரை அவை ‘தற்காப்புக்கானவையே; முதலில் பயன்படுத்துவதற்காக அல்ல’ என்ற கொள்கையை சீனா பின்பற்றிவருகிறது. இருந்தாலும், அணு ஆயுதக் கையிருப்பை சீனா அதிகரிப்பது தைவான் போரின்போது அமெரிக்காவுக்கு நெருக்கடியை கூடுதலாக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?