5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை:

தென்காசி, ஆக.25–
தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தென்காசி அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா வார்டுகள், சிறார் திறன் மேம்பாட்டு மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சேலம், மதுரை, கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கோவில்பட்டி, தஞ்சை உள்பட 16 இடங்களில் கட்டண படுக்கை அறைகள் உள்ளன. 17–வதாக தென்காசி அரசு மருத்துவமனையில் இந்த அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 19, 999 அரசு மருத்துவமனைகளில் "இதயம் காப்போம்" திட்டம் செயல்படுத்துப்பட்டு வருகிறது. இதயம் பாதிக்கப்பட்டோருக்கு தொடக்க நிலையிலேயே அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பான சிகிச்சை
தென்காசி மாவட்டம், வடகரை சுகாதார நிலையத்தில் இதயம் காப்போம் திட்டத்தில் 31 பேர் பட்டியலிடப்பட்டிருந்தனர். அதில் 3 நபரை தொடர்பு கொண்டு பேசிய போது, சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியதாக தெரிவித்தனர்.
அதேபோல நாய்க்கடி, பாம்புக்கடியால் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தென்காசியில் மாவட்ட மருத்துவக் கல்லூரி அமைக்க தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி திறக்கப்பட வேண்டும் என்பது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நோக்கம். அதன்படி காஞ்சிபுரம், தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?