பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்ற சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மாநில அரசு சட்டத்தின் ஓட்டையில் புகுந்து விளையாடினால்
மத்திய அரசின் அபிமானிகள் அதே சட்டத்தின் மற்ற ஓட்டைகளில் புகுந்து அரசுக்கு குடைச்சல் கொடுப்பார்கள்.
இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போதே அடுத்த தேர்தல் வந்துவிடும்.
அதன் பிறகு புதிய அரசு அமையும். அப்போது யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். அதுவரை பல பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர் இல்லாமலேயே தடுமாறிக் கொண்டிருக்கும்.
ஆசியாவில் மீண்டும் கரோனா அலை பரவி வருகிறது. இந்தியாவில் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒன்றும் மோசமான பாதிப்பு இல்லை, இயல்பானது தான் என்று கூறப்படுகிறது.
மேலும் பரவி வரும் புதிய அலை கரோனா தீவிரமானதாக இல்லை என்றும் சாதாரணமாகத் தான் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும் சொல்வது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
என்ன இருந்தாலும் நாம் புதிய கரோனாவுக்கு இடம் கொடுக்காமல் அதை விரட்டுவதற்கு தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
உக்ரைனுடன் போர் நிறுத்தம் சம்பந்தமாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் பேசியதற்கு பிறகு போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா தயார் என்று புடின் அறிவித்திருக்கிறார்.
ஆனால் அதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை நிறைவேற்ற சொல்கிறார்.
போர் நிறுத்தம் என்பது நிபந்தனைகளுக்கு உட்படாததாக இருக்க வேண்டும். போர் நிறுத்தத்திற்கு பிறகு வேண்டுமானால் அந்த நிபந்தனைகளை பற்றி பேசலாம். எனவே புடினின் இந்த அறிவிப்பு முழு மனதோடு கூறப்படுவதாக தோன்றவில்லை.
ஏழு மாதங்களில் 25 பேரை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றிவிட்டு ஓடிப்போன ஒரு பெண்ணை கைது செய்து இருக்கிறார்கள். நாடு முழுவதுமே இப்பொழுது திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பது பற்றாக்குறையாக இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டுதான் அந்தப் பெண் 25 திருமணங்களை மோசடியாக செய்து இருக்கிறார்.
இரண்டரை வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கிறார்,
இதற்கு காரணமான அந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அவரது கள்ளக் காதலனாகிய 19 வயது இளைஞன் தான் இதை செய்தது என்று தெரிகிறது.
இப்படிப்பட்ட கேவலமான சம்பவங்கள் ஆண் குலத்துக்கே அவமதிப்பை தேடித் தருகிறது.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்