அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக போராட்டம் வெடித்தது

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக போராட்டம் வெடித்தது



வாஷிங்டன், அக்.19–


குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கைகளை எதிர்த்து போராட்டம் வெடித்தது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அப்போது அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்றினார். அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். அடுத்ததாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு வெளிநாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கும் விதித்தார்.


அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது; சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது. திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவு, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய முடிவுகளையும் டிரம்ப் எடுத்துள்ளார்.


அரசு ஊழியர்கள் பணிநீக்கம்...


டிரம்ப் பதவியேற்றதில் ஏராளமான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவி திட்ட நிதியை பெருமளவு குறைத்துள்ளார்.டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் வெடித்தது. இங்கு யாரும் மன்னர் இல்லை என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 2500க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் என ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


வடக்கு வர்ஜீனியாவில், வாஷிங்டனுக்கு செல்லும் மேம்பாலங்களில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில், அமெரிக்க மூத்த எம்பி பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே உட்பட பல இடங்களில் டிரம்புக்கு எதிராக போராட்டம் நடந்தது.


டிரம்ப் பதில்


இந்த போராட்டம் குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,'இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது' என்று தெரிவித்தார். ‘அவர்கள் தன்னை ஒரு மன்னர் என குறிப்பிடுகிறார்கள். நான் மன்னர் இல்லை. அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


டிரம்புக்கு ஆதரவாக குடியரசுக் கட்சித் தலைவர்களும் போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றனர். அமெரிக்காவை வெறுக்கும் நபர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு பேரணிகளை நடத்துவதாகச் சபாநாயகர் மைக் ஜான்சன் சாடியுள்ளார். ஜனநாயகக் கட்சியினர் போராட்டங் களை ஆதரித்துள்ளனர். ஆனால் போராட்டக்காரர்கள் அமைதியாக இருந்து தங்கள் ஆர்ப்பாட்டத்தை அமைதியாக நடத்துமாறு வலியுறுத்தினர்.


ஆயிரக்கணக்கில்...


நியூயார்க், வாஷிங்டன் டிசி, சிகாகோ, மியாமி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான இந்த "நோ கிங்ஸ்" போராட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர். நியூயார்க் நகரத்தின் சின்னமான டைம்ஸ் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர், அரசியலமைப்பு விருப்பத்திற்குரியது அல்ல" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை மக்கள் ஏந்திச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னதாக, டிரம்ப் கூட்டாளிகள் போராட்டக்காரர்கள் தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டினர்.


மேலும் அவர்கள் "அமெரிக்காவை வெறுக்கும் பேரணி" என்று அழைத்ததைக் கண்டித்தனர். பல அமெரிக்க மாநிலங்கள் தேசிய காவல்படையை அணிதிரட்டின. ஆனால் நிகழ்வுகள் அமைதியானவை என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


நியூயார்க்கில், போராட்டக் காரர்களின் ஒரு பகுதியினர் "ஜனநாயகம் இப்படித்தான் இருக்கிறது" என்ற கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர், பின்னணியில் டிரம்பீட் ஒலித்தது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் தலைக்கு மேல் பறந்தன. போலீசார் ஓரமாக நின்றனர். நகரின் ஐந்து பெருநகரங்களிலும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்ததாகவும், போராட்டம் தொடர்பான கைதுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் நியூயார்க் காவல் துறை தெரிவித்துள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில், 7வது அவென்யூவில் 20,000 க்கும் மேற்பட்டோர் அணிவகுத்துச் சென்றனர்.


திரவத்தை ஊற்றும் டிரம்ப்


‘கிங் ட்ரம்ப்’ஆனால் சில மணி நேரங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூகவலைதளம் மற்றும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில் ஒரு ஏஐ வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘கிங் ட்ரம்ப்’ என்று எழுதப்பட்ட ஒரு ஜெட் போர் விமானத்தில் தலையில் கிரீடத்துடன் செல்லும் ட்ரம்ப் போராட்டக்காரர்கள் மீது பழுப்பு நிற திரவத்தை ஊற்றுகிறார். இந்த ஏஐ வீடியோவை குடியரசுக் கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.


அதேவேளையில் ஜனநாயகக் கட்சியினரும், பொதுமக்களின் ட்ரம்ப்பின் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஜனநாயக முறையில் போராடும் மக்களை நாட்டின் அதிபரே இவ்வாறாக கிண்டல் செயது என்ன மாதிரியான மனநிலை என்று விமர்சிக்கின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%