இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் பட்ஜெட்: எடப்பாடி வரவேற்பு

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் பட்ஜெட்: எடப்பாடி வரவேற்பு


சென்னை, பிப்.–


இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் மத்திய பட்ஜெட் என்று எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.


இதுசம்பந்தமாக 2026–- 2027–ம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை அறிக்கை குறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


இந்திய நாட்டின் 2025-–2026–ம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-–2027–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-–வது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


2025–-2026–ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, உலக அளவில் போர் போன்ற பதற்றத்தால் உள்ள உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 2025–-2026-க்கு 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026–-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் 2026–-2027–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இது வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, மின்னணுசார் உற்பத்தி, மருந்துகள், ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் போன்ற பல முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளதை பாராட்டுகிறேன். இதற்கான நிதி ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.


சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதம், கால்நடை துறை முதலியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.


சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூபாய் 2000 கோடி, மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை மிக உதவியாக இருக்கும். சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ் நாடு இதனால் பயன்பெறும்.


இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%