சென்னை, ஆக. 1-
அதிமுக, பாஜக கூட்டணி முறிவு குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து கூறுகையில், மத்தியில் பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தது வரலாற்றுப் பிழை என கூறிவிட்டு, பின்னர் பல்டி அடித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை-
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை அவரின் மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த பெருமைக்குரியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதிமுகவை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் ஜெயலலிதாவிற்கு உண்டு.
வரலாறு தெரியாதவர்
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் “இரட்டை இலை” சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற ஜெயலலிதாவை குறை சொல்லும் விதமாக “பாஜக கூட்டணி முறிவு" என்ற வரலாற்று பிழையை செய்து விட்டார் என்று ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி ஜெயலலிதா பாஜக கூட்டணியிலிருந்து விலகியதால் தான், 2001 ம் ஆண்டு அதிமுக தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்த வரலாறு தெரியாமல் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது, அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வரலாற்றுப் புரட்சி
ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல, அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அந்த புரட்சி அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜு பேச்சு தான் வரலாற்றுப் பிழை. "மோடியா, இந்த லேடியா" பார்த்து விடலாம் என்று சவால் விட்டு, 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்த ஜெயலலிதாவை கடம்பூர் ராஜூ குறை சொல்வதைப் பார்க்கும் போது “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. ஜெயலலிதாவை குறை சொல்வது என்பது “உண்ட வீட்டுக்கு இரண்டகம்" செய்வதைப் போன்றது.
மன்னிப்பு கேள்
“ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது" மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் இதற்குத் தக்க பாடத்தினை தமிழ்நாடு மக்கள் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.