காயமல்ல நேயம்

காயமல்ல நேயம்



ரகு வாசற் கதவருகே நின்றிருந்தான். அவன் கண்கள் தரையைப் பார்த்திருந்தன.


 வினிதா உள்ளுக்குள் கிளர்ந்த பழைய நினைவுகளைத் தள்ளி வைத்து விட்டு நேராக முகத்தைப் பார்த்தாள்.


“இது இரக்கம் இல்லை ரகு…

உன் நிலை எனக்குத் தெரிகிறது... உதவணும்னு தோணுது!... அதனால்

இந்த உதவியை நீ ஏற்றுக் கொள்ளணும் ரகு,” என்றாள் வினிதா.


“வேண்டாம் வினிதா!... என்னைக் கம்பெல் பண்ணாதே... ப்ளீஸ்!,”

அவனது குரல் கரகரத்தது.


" ஏன்?..ஏன் வேண்டாம்?"


“நீ என் முன்னாள் காதலி... உன்னிடம் கை நீட்டினா... என் வாழ்க்கை இன்னும் சிறுமையாய் ஆயிடும்.”


வினிதா பேச முயன்ற போது,

அறையினுள்ளிருந்து இன்னொரு குரல் வந்தது.


“உங்களுக்கு வேண்டாமெனில்… நம் குழந்தைகளுக்காகஏற்றுக் கொள்ளுங்கள்.”


ரகு திரும்பிப் பார்த்தான். அவன் மனைவி யசோதா.


அவள் முகத்தில் துளியும் தயக்கமில்லை. அவமானமும் இல்லை. அழுத்தமான தெளிவு மட்டுமிருந்தது.


“நீங்க கொடுக்கறது உங்க பழைய காதலுக்கான உதவி இல்லைன்னு

எனக்கு தெரியும். இது ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் செய்யற நேர்மையான உதவி.”என்றாள் யசோதா.


ரகு நடுங்கும் குரலில் கேட்டான்.

“உனக்கு பொறாமை இல்லையா?”


யசோதா மெல்லச் சிரித்தாள்.

“வறுமைக் காலத்தில் வாழும் போது பொறாமைக்கு இடமே இல்லைங்க!”


வினிதா அந்தக் காசோலையை மடித்து வைத்தாள்.


“இது கடன் இல்லை....திருப்பித் தரவே வேண்டாம்....ஆனா ஒரு விஷயம் மட்டும் பண்ணுங்க.”


“என்ன?” என்றான் ரகு.


“நாளைக்கு நீங்க நல்ல நிலைமைக்குத் திரும்பும் போது, வறுமையிலிருக்கும் இன்னொருத்தனுக்கு கை கொடுங்க.... அதுதான் நீங்க எனக்குத் திருப்பித் தர்றது.”


ரகுவின் விழியோரம் ஈரம்.

யசோதா அவன் கையைப் பிடித்தாள்.


வினிதா நின்று... நிதானித்து வெளியேறிய போது, மூன்று பேருக்கும் ஒரு உண்மை புரிந்திருந்தது. 


"காதல் தரும் காயம் 

மனிதநேயமாக மாறும் போதுதான் அது தெய்வீகக் காதலாகின்றது"


(முற்றும்)



முகில் தினகரன்

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%