கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற வசூலித்த பணம்: பேச்சு நடத்தியவர் அபகரித்து விட்டதாக புகார்
புதுடில்லி:
நிமிஷா பிரியாவை காப்பாற்ற வசூலித்த பணத்தை, பேச்சு நடத்த சென்றவர் அபகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 36. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர், அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் தலைநகர் சனாவில் சொந்தமாக, 'கிளினிக்' துவக்கினார்.
நிமிஷாவின் வருமானம், கிளினிக்கின் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவருக்கு தலால் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. 2017ல், தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார். அதிக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால், தலால் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் நிமிஷா பிரியா குற்றவாளி என அறிவித்து, மரண தண்டனையை ஏமன் நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது தாய் உட்பட உறவினர்கள் போராடி வருகின்றனர். நிமிஷா பிரியாவை காப்பாற்ற பணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, நிமிஷா பிரியா வழக்கில் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் பத்தா மஹ்தி, நிமிஷா பிரியாவை மீட்கும் முயற்சிகளை ஒருங்கிணைத்து வரும் ஏமனை சேர்ந்த சாமுவேல் ஜெரோம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவர் கூறியதாவது: நிமிஷா பிரியாவை காப்பாற்ற வசூலித்த பணத்தை சாமுவேல் ஜெரோம் தவறாக பயன்படுத்தினார்.
ஜெரோம் தன்னை ஒரு வழக்கறிஞராக தவறாகக் குறிப்பிட்டு, ஏமனில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உடன் தொடர்பு இல்லாமல், நிதி திரட்டினார். அவர் 40 ஆயிரம் டாலர் உட்பட திரட்டப்பட்ட நிதியை அபகரித்து கொண்டார். ஏமன் ஜனாதிபதி, நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனைக்கு ஒப்புதல் அளித்த பிறகு, நான் சனாவில் ஏமனை சேர்ந்த ஆர்வலர் சாமுவேல் ஜெரோமை சந்தித்தேன்.
அவர் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக்கள் என்று கூறினார். உயிரிழப்பில் சிந்திய ரத்தத்தை மத்தியஸ்தம் என்ற பெயரில் ஜெரோம் வர்த்தகம் செய்தார். அவர் தனது வக்கிர செயலை நிறுத்தவில்லை என்றால் உண்மை வெளிப்படும்,' என்று அவர் எச்சரித்தார்.
இதற்கிடையில், நிமிஷா பிரியா வழக்கில் இடைத்தரகராக இருந்த ஜெரோம் என்பவரை சர்வதேச செயல்பாட்டு கவுன்சில் வெளியேற்றியது. இது குறித்து, கவுன்சிலின் சட்ட ஆலோசகரான சுபாஷ் சந்திரன் கூறியதாவது: அவரது நடவடிக்கைகள் குறித்து கவுன்சில் ஆய்வு செய்தது. அவரது செயல்பாட்டில் சந்தேகம் இருந்தது.
மத்தியஸ்த முயற்சிகளைக் கையாளும் நபர்களை அவமதித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, ஜெரோம், துணைத் தலைவர் தீபா ஜோசப் மற்றும் உறுப்பினர் பாபு ஜான் ஆகியோரிடமிருந்து நடவடிக்கை கவுன்சில் விலகியது. நிமிஷா பிரியா மற்றும் உயிரிழந்த தலால் மஹ்தியின் குடும்பங்கள் இருவரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஜெரோம் என்பவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஏமனில் பல்லாண்டுகளாக வசிக்கிறார். அவர் நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதாக கூறி அவரிடம் இருந்தும் அவரது தாயாரிடம் இருந்தும் பொது அதிகாரம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.